விஜய் ஆண்டனி நடிப்பில் அவரது 25வது படமாக உருவாகியுள்ள படம் ‘சக்தித் திருமகன்’. இப்படத்தை அருவி, வாழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிருபலானி, செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் படத்தை தயாரித்து இசையமைத்தும் உள்ளார். படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
இப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பின்னணி பாடகி மற்றும் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது மேடையில் விஜய் ஆண்டனி குறித்து அவர் பேசுகையில், “விஜய் ஆண்டனி எங்க குடும்பத்தில் ஒருவர். முதலில் அவரை என் கணவர் தான் சுக்ரன் படத்தில் அறிமுகம் செய்தார். அப்போது வேறு ஒரு பெயர் வைத்துக் கொண்டு வந்தார். ஆனால் அதை மாற்றி விஜய் ஆண்டனி என என் கணவர் வைத்தார்.
என் கணவர் ரொம்ப ராசியானவர். அதனால் விஜய் ஆண்டனி இப்போது நன்றாக இருக்கிறார். நடிகராக 25 படம் நடித்துவிட்டார். அவர் தேர்வு செய்யும் கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். புதுசாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். அவரும் ஒரு வித்தியாசமான மனிதர். அவர் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.