கன்னட நடிகரான தர்ஷன், விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் தர்ஷன் தன்னை மிரட்டி அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி விஜயலட்சுமி பிரிந்து சென்றுள்ளார். அதே சமயம் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகையும், மாடலுமான பவித்ரா கௌடாவுடன் தர்ஷன் பழகி வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். தர்ஷனின் ரசிகரான ரேணுகா சாமி, தர்ஷனும் - விஜயலட்சுமியும் பிரிந்ததற்கு பவித்ராதான் காரணம் என்று பவித்ராவின் இன்ஸ்டாகிரமில் ஆபாசமாகப் பேசி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் பவித்ரா பிரிந்து சென்றால்தான் தர்ஷனும், விஜயலட்சுமியும் ஒன்றாக வாழ்வார்கள் எனக் கடுமையான வார்த்தைகளில் பேசி ஆபாசமான படங்களையும் குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறார். 

இதனைப் பவித்ரா தர்ஷனிடம் சொல்ல, தனது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடத்தி கொலை செய்துள்ளார் தர்ஷன். இந்த வழக்கு தொடர்பாக தர்ஷன், பவித்ரா உள்ளிட்ட கொலை செய்த 17 நபர்கள் கைது செய்யப்பட்டனர். பின்பு சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். தர்ஷனின் ஜாமீனை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கன்னட நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சாதாரண குடும்பத்திற்கு உச்ச நீதிமன்றம் தான் நம்பிக்கை, ரேணுகா சாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரது கருத்திற்கு தர்ஷனின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆபாசமாக ரம்யாவுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். மேலும் மற்றொரு பதிவில், இந்த விவகாரம் தொடர்பாக தர்ஷனின் ரசிகர்கள் குறித்து ரம்யா மீண்டும் பதிவிட, மீண்டும் தர்ஷனின் ரசிகர்கள் ரம்யாவை சாடியுள்ளனர். குறிப்பாக ஆபாச மெசேஜ்கள் தொடர்ந்து அனுப்பியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கடுப்பான ரம்யா, “ரேணுகா சாமி மெசேஜுக்கும் தர்ஷன் ரசிகர்களின் மெசேஜுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை” என தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆபாச மெசேஜ் அனுப்பிய தர்ஷனின் ரசிகர்கள் பெயர்களையும் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் தர்ஷனின் ரசிகர்கள் மீது சமுக வலைதலத்தில் தன்னை துன்புறுத்துவதாக கூறி புகார் கொடுத்துள்ளார். மேலும் ரேணுகாசாமிக்கு பதிலாக நான் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றெல்லாம் பலர் ஆன்லைனில் பதிவுகள் போடுவதாக ஆதங்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரம்யாவுக்கு தற்போது கன்னட திரையுலகில் ஆதரவு பெருகத் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநில மகளிர் ஆணையம், சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து நடிகர் சிவ ராஜ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், “ரம்யாவுக்கு எதிராகப் பேசப்படும் வார்த்தைகள் கண்டிக்கத்தக்கவை. எந்தப் பெண்ணுக்கும் எதிராக அப்படிப் பேசுவது சரியல்ல. அதை நாம் பொறுத்துக்கொள்ள முடியாது. பெண்களை தாய்மார்களாக, சகோதரிகளாக, மகள்களாக, மனைவிகளாக, முதலில் தனிநபர்களாக மதிக்க வேண்டியது மிகவும் முக்கியம். சமூக ஊடகங்கள் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம், அது ஒருவரின் சொந்த முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், மாறாக அவர்களைச் சொல்ல முடியாத வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்து வெறுப்பையும் பொறாமையையும் விதைக்கக்கூடாது. ரம்யா, உங்கள் நிலைப்பாடு சரிதான். நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையை ரம்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.  

Advertisment