
கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி.யின் உயிர்பிரிந்தது. இன்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மறைந்த பாலசுப்ரமணியத்திற்கு பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக்கான் மற்றும் அமீர் கான் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஷாரூக்கான்: இந்த இழப்பில் வாடும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் அனுதாபங்கள். சாதனைப் பாடகரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது இனிமையான குரலின் இழப்பை உணர்வேன்.
அமீர் கான்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவைப் பற்றி கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். அவர் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள். நமது காலகட்டத்தின் மிகச்சிறந்த திறமையாளர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.