மலையாள நடிகர் ஷேன் நிகம், ப்ரீதி நடித்திருக்கும் படம் ‘பல்டி’. இப்படத்தை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கியிருக்க சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் மூலம் மலையாளத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 

Advertisment

நிகழ்ச்சியில் சாந்தனு பேசுகையில், “ப்ளு ஸ்டார் சந்திப்பிற்கு பிறகு இப்போது தான் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். என்னுடைய முதல் படம் ஆரம்பித்து இன்றுவரை நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். நடிகரோ, தொழில்நுட்ப கலைஞர்களோ எந்தளவிற்கு கடினமாக உழைக்கிறார்களோ அந்தளவிற்கு அவர்களுக்கு நீங்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறீர்கள்.

நான் சாந்தனு பாக்யராஜ்-ஆகத்தான் அறிமுகமானேன். ஆனால், இன்று 15 வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் இணைந்திருக்கிறேன். உன்னியின் நண்பர் தேவ் என்னை இப்படத்திற்காக பரிந்துரை செய்திருக்கிறார். உடனே உன்னி மற்றும் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்து கதை கூறி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு பாவக்கதைகள், தங்கம் எனக்கு கிடைத்தது. திரையரங்கில் வெற்றியடைந்த படமாக ப்ளு ஸ்டார் அமைந்தது.

பல்டி 4 பசங்களை கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. இப்படம் மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும். மலையாளம் தெரியுமா என்று கேட்டதும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று தெரியும் என்று கூறினேன். பிறகு நான் நடித்துவிடுவேன் ஆனால், வசனங்கள் கொஞ்சம் சிரமம் என்று கூறினேன். 1 மாதம் ஆன்லைன் டீச்சர் வைத்து பயிற்சி கொடுத்தார்கள்.

Advertisment

கபடி குழுவில் ஒருவர் காணாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறார்கள். 3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்து நடித்தோம். செல்வராகவன் சாருக்கு ரசிகனாக இல்லாமல் யாரும் இருக்க முடியாது. அவரிடம் அவருடைய படங்கள் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. அல்போன்ஸ் சாரிடம் பிரேமம் பற்றி பேசினேன். ப்ரீதி அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். அப்பா எப்போதும் மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்பார். ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன். திருவிழா காட்சியில் தோன்றும்போது வேறு மாதிரி இருப்பார். நாமும் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்.

சாய்க்கு முதல் மலையாளப் படம், சந்தோஷமாக இருக்கிறது. நம்மை நம்பி இங்கு வந்திருக்கிறார்கள். இப்படம் பிடித்திருந்தால் அனைவரும் ஆதரவு கொடுங்கள். மலையாளத்தில் நான் தான் டப்பிங் பேசினேன். 3 நாட்களில் பேசி முடித்தேன். ஆனால், 3 நாட்களில் முடித்துவிட்டோம் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால், மறுபடியும் கேரளாவிற்கு அழைத்து இந்த ஒரு காட்சிதான் என்று கூறி முழு வசனங்களையும் பேசவைத்தார் தமிழ் படத்தில் உதடு அசைவுகளுக்கு ஏற்ப டப்பிங் பேச வேண்டும். அது சிறிதும் மாறாத அளவிற்கு பாலா சார் பணியாற்றியிருக்கிறார்” என்றார்.