
தே.மு.தி.க முன்னாள் தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன். இவர் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த ‘படை தலைவன்’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் சில காட்சிகளில் தோன்ற அது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்படத்தை அடுத்து சீமராஜா பட இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வந்தார். ‘கொம்பு சீவி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் கிளிம்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் சண்முக பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. அதில் உசிலம்பட்டி பின்னணியில் இப்படம் உருவாகிவருதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொம்பு சீவி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து போடப்பட்டது. சண்முக பாண்டியன் பலருக்கும் பிரியாணி பரிமாறினார். பின்பு நிறைய தொழில் நுட்ப கலைஞர்களுக்கு உடைகள் பரிசாக வழங்கினார்.