மலையாளத் திரையுலகு மூலம் திரைத்துறையில் அறிமுகமான ஷகிலா, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற இந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துவரும் ஷகிலா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துவருகிறார். சமீபத்தில் அவர் பங்கெடுத்த ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், ஷகிலா மரணமடைந்துவிட்டதாக மர்ம நபர் ஒருவர் சமூகவலைதளங்களில் தகவல் பரப்பிவிட்டார். அத்தகவலின் உண்மைத் தன்மையை அறியாமல் பலரும் ஷேர் செய்ய ஆரம்பிக்க, அத்தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீபோல பரவியது. இது நடிகை ஷகிலாவின் கவனத்திற்கும் வர, இதுகுறித்து விளக்கமளித்து அவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அக்காணொளியில், தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஷகிலா, இத்தகவல் பரவ ஆரம்பித்த பிறகு நலம் விசாரித்து நிறைய தொலைபேசி அழைப்புகள் தனக்கு வந்ததாகவும், ரசிகர்களை என்னைப் பற்றி மீண்டும் நினைக்க வைத்ததற்காக அந்த மர்ம நபருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பேசியுள்ளார்.