பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த நான்கு ஆண்டுகளாகவே சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது கதாநாயகனாக 'பதான்' மற்றும் 'ஜவான்' படங்களில் நடித்து வருகிறார். இதில் 'பதான்' படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க ஜான் ஆபிரகாம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் 'ஜவான்' படத்தை அட்லீ இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஷாருக்கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், "நீங்களும் விஜய்யும் எப்போது இணைந்து நடிப்பீர்கள். விஜய் பற்றி உங்கள் கருத்து" எனக் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஷாருக்கான், "விஜய் ஒரு அமைதியான நடிகர். படங்கள் நடக்கும் போதுதான் நடக்கும். அந்த வகையில் அவர்களும் விரும்பினால் அது நடக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஷாருக்கானின் இந்த பதில் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.