பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான், விவசாய நிலத்தை வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் பின்வருமாறு. 

Advertisment

2023 மற்றும் 2024ஆம் ஆண்டு ரூ.22 கோடியளவில் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் என்ற ஊரில் இரண்டு நிலங்களை சுஹானா கான் வாங்கியுள்ளார். இந்த நிலங்கள் ‘தேஜாவு ஃபார்ம் பிரைவேட் லிமிட்டட்’ என்ற பெயரில் பதிவாகியுள்ளது. இந்த நிறுவனம், சுஹானா கானின் தாயாரான கௌரி கானின் தாயார் மற்றும் மைத்துனிக்கு சொந்தமானது. 

சுஹானா கான் வாங்கியுள்ள இந்த இரண்டு நிலங்களில், ஒரு நிலம் அலிபாக் ஊரில், தால் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை அஞ்சலி, ரேகா மற்றும் பிரியா என்ற மூன்று சகோதரிகளிடம் ரூ.12.91 கோடிக்கு சுஹானா கான் வாங்கியுள்ளார். இந்த மூவரும் அவர்களது பெற்றோரிடமிருந்து நிலத்தை பெற்றுள்ளனர். இந்த நிலத்தை முதலில் அரசாங்கம் விவசாயத்திற்காக ஒதுக்கியுள்ளது. இதை வாங்கும் போது சுஹானா கான், தான் ஒரு விவசாயி என பதிவு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார். இதனால் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. மேலும் விவசாய நிலத்தை வேறு எதாவது நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துணை ஆட்சியர் சந்தேஷ் ஷிர்கே, அலிபாக் ஊரின் தாசில்தாரிடம் உண்மையான நிலவரத்தைக் கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.