sendraayan about daniel balaji

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம்மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், சூர்யா, ராதிகா, ஆண்ட்ரியா, சந்தீப் கிஷன், மோகன் ராஜா, அதர்வா உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனிடையே இயக்குநர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், அமீர், விஜய் சேதுபதி, அதர்வா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisment

இந்த நிலையில் நடிகர் செண்ட்ராயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவருடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “பொல்லாதவன் படத்தில் மிகப் பெரிய வில்லன் ரோல் டேனியல் அண்ணன் நடித்தார். அவருடன் வரும் காட்சிகளிலெல்லாம் அழகா எனக்கு சொல்லிக் கொடுப்பார். அவரு ஜெயிக்கனும்னு ஆசைப்படமாட்டாரு. அந்த டீம் ஜெயிக்கணும், சீன் ஜெயிக்கணும் படமே ஜெயிக்கணும்-னு ஆசைப்படுவாரு. அவருடன் மூணு படம் வேலை பார்த்திருக்கேன். ரொம்ப நல்ல மனிதர். அவர்கிட்ட எதைபத்தி கேட்டாலும் கரெக்டா சொல்லுவார். உயிரோடு இருக்கும் போதே கண்தானம் பண்ணியிருக்கார். அதற்கு பெரிய மனசு வேணும். இன்னும் 50 வருஷம் வாழ்ந்திருக்கலாம். அதற்குள் கடவுள் கூப்பிட்டுவிட்டார். ” என்றார்.