selva

'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பலரை ரசிகராகச் சம்பாதித்தவர் செல்வராகவன். இவருடைய 'நெஞ்சம் மறப்பதில்லை' மற்றும் 'மன்னவன் வந்தானடி' ஆகிய இரு படங்களும் இறுதிக் கட்ட பணிகள் வரை முடிவடைந்து, பொருளாதாரச் சிக்கல்களால் ரிலீஸாக முடியாமல் இருக்கிறது.

Advertisment

இதன்பின் சூர்யாவை வைத்து 'என்.ஜி.கே' படத்தை இயக்கினார். தற்போது தனுஷை வைத்து 'புதுப்பேட்டை2' எடுப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பதினான்கு வயது சிறுவனாக இருந்தபோது எவ்வளவு சிரமப்பட்டேன் என்பதை மனமுறுகி பதிவிட்டுள்ளார்.அதில்,

“அன்புள்ள செல்வா(வயது14), இந்த உலகம் உன்னுடைய தோற்றத்தைக் கண்டு சிரித்தது, ஏனென்றால் உன்னுடைய ஒரு கண் பார்வையின்மை. ஒவ்வொரு இரவும் அதை நினைத்து அழுதிருக்கிறாய். சில நேரங்களில் கடவுளிடம், ஏன் நான்? எதற்காக என்னுடைய கண்ணைப் பிடுங்கினாய் என்று கேட்டிருக்கிறேன்.

Advertisment

ஆனால், அதற்கு அவர் கவலைப்படாதே செல்வா, சரியாக இன்னும் பத்து வருடங்களில் நீ எழுதி இயக்கி ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பது முற்றிலுமாக உன்னுடைய வாழ்க்கையை மாற்றிவிடும். இதே உலகம் உன்னை கிண்டலடிக்காமல், மரியாதையுடன் உன்னை ஜீனியஸாகப் பார்க்கும். தற்போது உங்களைப் பார்ப்பவர்கள், இளம் வயதை முற்றிலுமாகப் பயமுறுத்திய அந்தக் கண்ணைப் பார்க்கமாட்டார்கள். கடவுள் உங்களிடம் இருந்து மதிப்புமிக்க ஒன்றை எடுத்துவிட்டார் என்றால் அதைவிட மிகுதியான ஒன்றைத் திருப்பி கொடுத்துவிடுவார். அதனால், கவலைப்பாடாதே. புகைப்படங்களுக்குச் சிரி, எதிர்காலத்தில் பல புகைப்படங்களுக்குச் சிரிக்க வேண்டிய நிலை வர இருக்கிறது. உன்னை நேசி. இயக்குனர் செல்வராகவன்(வயது 45)" என்று குறிப்பிட்டுள்ளார்.