Skip to main content

வீணாகாத செல்வராகவனின் உழைப்பு... கரோனா காலத்திலும் திரையரங்கில் கொண்டாடும் ரசிகர்கள்...

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

ayirathil oruvan

 

எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, வெளியான சமயத்திலேயே செம ஹிட் அடித்தது. ஆனால், செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமோ வெளியான சமயத்தில் ‘என்னடா இது’ என்று பார்த்தவர்கள் குழப்பமாகக் கேட்க, பின்னர் காலம் கடந்து மறு வெளியீடு செய்யும்போதெல்லாம் திரையரங்கில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

 

கடந்த 2019ஆம் ஆண்டு செல்வராகவனின் பிறந்தநாளின்போது அவருக்கு ட்ரிபியூட் செய்யும் விதமாக செல்வாவின் மாஸ்டர் பீஸ் படங்களான 'புதுப்பேட்டை' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இந்தப் படங்கள் வெளியானபோதுகூட தியேட்டர்களில் டிக்கெட் வாங்க இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், மீண்டும் வெளியானபோது இவ்விரண்டு படங்களும் செம கிராக்கியானது. ஷோ இருப்பதாக அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல். அப்போது கரோனா நெருக்கடி இல்லாத சமயம் 100 சதவித டிக்கெட்டும் விற்கப்பட்ட சமயத்தில் தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் ஹவுஸ் ஃபுல் என்பதைப் பார்த்து பலரும் ஆச்சர்யமடைந்தனர்.

 

'ஆயிரத்தில் ஒருவன்' வெளியானபோது அந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் இருந்தது எதிர்ப்பும் விமர்சனங்களும்தான். ‘இந்தப் படம் சோழர்களை இழிவாகக் காட்டுகிறது', ‘படம் இரத்தம், கத்திக்குத்து என்று முழுக்க வயலன்ஸாக இருக்கிறது’, ‘படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லை’ என்றும் விமர்சனங்கள் வந்தன. படத்தில் ரீமாசென், ஆண்ட்ரியா இருவரும் பேசிய சில வசனங்கள், கார்த்திக்கு இருபுறமும் நாயகிகள் கட்டிப்பிடித்துக் கிடப்பது என இன்னொரு ஆங்கிலிலும் விமர்சித்தார்கள் அப்போதைய சினிமா பார்வையாளர்கள். ஆனால், காலங்கள் மாற மாற, பழைய விமர்சனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு புதிதாக விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. 

 

2019ஆம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை திரையரங்கில் பார்த்தவர்கள் கரகோஷங்களை எழுப்பி, காது கிழிய விசில் அடித்து, அவ்வளவு மகிழ்ச்சியாகப் படம் பார்த்தனர். ஒவ்வொருவரும் 'இந்தப் படம் வந்த சமயத்தில் பார்க்க முடியாமல் போனது', 'அதை கொண்டாடும் அளவிற்கு எங்களுடைய மனநிலை இல்லை', 'செல்வா எங்களை மன்னிச்சிடுங்க', 'நீங்க ரொம்ப ஜீனியஸ்', 'அப்போ புரியவில்லை, இப்போ புரியுது' என்றெல்லாம் சொல்கிறார்கள். '90ஸ் கிட்ஸ் இத ஓடவைக்காம தப்பு பண்ணிட்டாங்க, 2000 கிட்ஸ் நாங்க ஓட வைக்கிறோம்' என்றும் படத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக பதிவிட்டார்கள்.

 

தற்போது கரோனா நெருக்கடி சமயம், திரையரங்குகள் 50 சதவித இருக்கைகள் கொண்டே இயங்கப்படுகிறது. ரசிகர்களை திரையரங்கிற்குள் அழைத்து வருவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் சமயத்தில் மீண்டும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட படங்கள் தமிழகத்தில் ஒருசில திரையரங்குகளில் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியிடப்பட்டுள்ளன. மீண்டும் இப்படங்கள் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமான விஷயமே. குறிப்பாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பிரம்மாண்டத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்காதவர்கள் பலர் இருக்கக்கூடும், அவர்களெல்லாம் இதை எப்படியாவது ரசித்துவிட வேண்டும் என்று திரையரங்கிற்கு சென்று கொண்டாடி ரசிக்கின்றார்கள். புதுப்படம் வெளியாகும் சமயத்தில் எப்படி சமூக வலைதளங்கள் முழுவதும் அப்படங்களை ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ பகிரப்படுமோ, அதுபோல பகிரப்பட்டு வருகிறது.

 

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இசை எந்தக் காட்சியிலும் நம்மை உணர்ப்பூர்வமாகக் கடத்தும் என்பதில் சந்தேகமே இல்லை, அப்படி முழு மூச்சுடன் வேலை செய்திருப்பார் ஜி.வி.பிரகாஷ். ‘ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2’ எப்போது வரும் என்று பல கேள்விகள் எழுந்துகொண்டிருந்த சமயம், “படம் வந்தபோதே கொண்டாடியிருந்தால், தற்போது ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ வந்திருக்கும். இனிமேல் அந்தப் படத்தைக் கொண்டாடி எதுவும் ஆகப்போவதில்லை. படம் வந்தபோது எனக்கோ செல்வாவுக்கோ ராம்ஜிக்கோ எந்தப் பாராட்டும் கிடைக்கவில்லை. ஒரு விருதும் கிடைக்கவில்லை” என்று வருத்தத்துடன் பேசியிருந்தார் ஜிவி. ஆனால், ரசிகர்களின் நம்பிக்கையும் வேண்டுகோளும் வீணாகவில்லை. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை செல்வராகவன் எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றும் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“முதன் முதலில் கலைஞர் என்னை பார்த்து இவ்வாறு அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது”- நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
actor Dhanush says  It was a surprise when the artist called me this for the first time

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது. 

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமே இல்லை. ஒரு படத்தின் பூஜையின் போது நான் முதல் முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கே வந்திருந்த கலைஞர் என்னை பார்த்து ‘வாங்க மன்மத ராஜா’ என்று கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா? என ஆச்சரியமாக இருந்தது. அதை பார்த்து நான் நெகிழ்ச்சி அடைந்தேன். 

ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பதை நம்ப முடியாது. கலைஞரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். யாராவது சொன்னால் தான் அவர் மறைந்து விட்டார் என்று நினைவுக்கு வரும். இப்பவும் அவர் நம் கூட வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியன் பூங்குன்றனார் சொல்லிருப்பார். ஆனால், நம்முடைய கலைஞர் 2000ல் ‘நான் என்று சொன்னால், உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும்’ என்று சொன்னார். நாமாக வாழ்வோம் நலமாக வாழ்வோம்” என்று பேசினார்.