"அனைத்தும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான்..." - அனுபவம் பகிரும் செல்வராகவன்

selvaraghavan shares saani kaayidham movie experience

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன், இயக்குவதுமட்டுமின்றி தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'சாணிக்காயிதம்' படத்தில் செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து முடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் மே 6 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்ததுகுறித்து இயக்குநர் செல்வராகவன் கூறுகையில், "நான் இயக்குநராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்யக்கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான் பேக்கப் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன். இது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். நடிப்பது சலிப்பு ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்று நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அது ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை கற்பிப்பதாக இருந்தது. பொறுமை காத்து என்னுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் அருண்மாதேஸ்வரன் மற்றும் படக்குழுவினருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

keerthy suresh saanikaayidham selvaraghavan
இதையும் படியுங்கள்
Subscribe