Skip to main content

”அனைவருக்கும் என் மகள்களின் கைகளால் நன்றி கூறுகிறேன்” - சீனு ராமசாமி உருக்கம் 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

Seenu Ramasamy

 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற மாமனிதன் திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்திலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில், படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், ”கலாப்பிரியாவின் ஒரு கவிதை இருக்கிறது, காயங்களோடு இருப்பவனை விரட்டி கொத்தும் காக்கையை பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பை, தங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன். நீங்கள் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்த காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு போட்ட பணம் திரும்ப வந்தால் அதுவே வெற்றிதான்.

 

திரையரங்குகளில் இந்தப்படம் நன்றாகவே போனது. ஆனால் அதன் லாபம் என்பது தொக்கி நின்றது. அந்த நேரத்தில்தான் ஆஹா ஓடிடி வந்தது. அவர்களால் இன்று இப்படம் 155 நாடுகளை சென்றடைந்துள்ளது. எல்லோரும் பார்த்து பாராட்டுகிறார்கள். இதற்காக தனிப்பட்ட முறையில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். திரையரங்கில் தவறவிட்டவர்கள் ஓடிடியில் கண்டுகளிக்கலாம். திரையரங்கில் என்ன தரத்தில் படம் இருந்ததோ அதே தரத்தில் ஓடிடியிலும் உள்ளது. தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும் நாயகன் விஜய் சேதுபதிக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்