
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கியுள்ளது. இதையடுத்து சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு, முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் கடைசி காட்சி முடிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியது, "லியோ படத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என சொல்வதே ஒரு அரசியல் தான். ஏற்கனவே பாட்டு வெளியிட அனுமதிக்கவில்லை. இப்போது 9 மணிக்கு காட்சி ஆரம்பிக்க சொல்லி சீக்கிரம் முடிக்க சொல்வது மேலும் திரையரங்கில் காவலர்கள் போட்டு கண்காணிப்போம் என்றும், ரசிகர்கள் தேவையில்லாமல் பிரச்சனை செய்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் சொல்வது தேவையில்லாமல் படக்குழுவிற்கு நெருக்கடியை கொடுக்கிறார்கள். இது மாதிரி ஜெயிலர் படத்துக்கு செய்யவில்லையே. விஜய்யை தொந்தரவு செய்வது வெளிப்படையாக தெரிகிறது. அதை எப்படி ஏற்க முடியம். இதற்கு முன்னாடி இந்த நெருக்கடியை விஜய் படத்திற்கு நாம் பார்க்கவில்லை. அதனால் தான் சந்தேகம் வருகிறது.
இன்றைக்கு திரைப்படத்தின் வர்த்தகம் எல்லாருக்கும் தெரியும். முன்பெல்லாம் ஒரு திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடும். ஆனால் இப்போது ஒரு வாரம் தான். கார்ப்பரேட் வந்துவிட்ட பிறகு ஒரே நாளில் வசூலை எடுக்கிறது. 1000 திரையரங்குகளில் பல காட்சிகளை திரையிட்டு லாபத்தை ஈட்டிக்கொள்வது. திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே நல்ல வசூலை லியோ படம் எட்டியுள்ளதாக சொல்கிறார்கள். அந்த மாதிரி நிலைமையில் சிறப்பு காட்சிகள் இருந்தால் தான் வசூலை அவர்களால் எடுக்க முடியும். எங்களுடைய ஆட்சி வரும் போது அதை சீரமைப்போம்" என்றார்.