வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியாவில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பாகுரில் 1883-ஆம் ஆண்டு மே 28-ல் பிறந்தார். ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு, 12 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். இந்துத்துவா மற்றும் வலது சாரி ஆதரவாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிற இவர் 1966-ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி இறந்தார். இவரது 139-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரின் வாழ்க்கையை மையப்படுத்தி பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
இந்நிலையில் சாவர்க்கரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. இதற்கானஅறிவிப்பை வெளியிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 'ஸ்வதந்த்ரா வீர் சாவர்கார்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் சாவர்கார் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்தீப் ஹூடா நடிக்கிறார். ஆனந்த் பண்டிட் உள்ளிட்ட மூன்று பேர் தயாரிக்கும் இப்படத்தை மகேஷ் மஞ்சரேக்கர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.