Skip to main content

“என் கொள்கைகளை பேசும் படமாக அமைந்தது” - சத்யராஜ்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

sathyaraj speech in valli mayil audio launch

 

சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வள்ளிமயில்’. இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன்  உட்பட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தாய் சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். 80களின் நாடகக்கலை பின்னணியில்  திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

இவ்விழாவினில் சுசீந்திரன் பேசியதாவது, “நல்லுசாமி பிக்சர்ஸுடன் எனக்கு இது 4 வது படம். வள்ளி மயில் ஒரு க்ரைம் திரில்லராக ஆரம்பித்த படம். ஒரு வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும். பிரகாஷ்ராஜ் சார் மிரட்டியிருக்கிறார். இமான் சார் உடன் 7  வது படம், இன்னும் நிறையப் படங்கள் வேலை செய்வோம். விஜய் ஆண்டனி சாருடன், முதல் முறையாக வேலை செய்கிறேன். உங்கள் படம் சார் நீங்கள் சொல்வதை செய்கிறேன் என்று வந்தார், அவருக்கு நன்றி. வெண்ணிலா கபடிக் குழு படத்திற்குப் பிறகு நிறையக் கதாபாத்திரங்கள். சத்யராஜ் சார் மிக முக்கியமான ரோல், அவரைச் சுற்றி 4 பேர். அதே போல், விஜய் ஆண்டனியை சுற்றி 4 பேர் எனப் பெரிய கூட்டம் படத்தில் இருக்கும். ஃபரியா அப்துல்லா மிக முக்கியமான ரோல், அற்புதமாக நடித்துள்ளார். மிகச் சிக்கலான கதை, அதை மிக எளிமையாகச் சொல்ல முயன்றுள்ளோம்” என்றார்.

 

விஜய் ஆண்டனி பேசுகையில், “சுசீந்திரன் சார் உடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம். பிச்சைக்காரன் படமெடுக்கும் போது, இந்தப் படம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்தது. இந்த படத்தில் இயக்கம் பற்றி நான் நிறையக் கற்றுக்கொண்டேன். சுசீந்திரன் சாருக்கு நன்றி. சத்யராஜ் சாருடன் இணைந்து திரையில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி, அவருக்கு நான் ரசிகன். இமானுக்கும் நான் ரசிகன். அவரது இசை குறித்து எனக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். அவரது அப்பா எனக்கு நெருக்கம். அவரது வளர்ச்சி, மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். 

 

சத்யராஜ் பேசுகையில், “நாம் நடிக்கும் நிறைய படங்களில் நம் கொள்கைகள் பற்றி எல்லாம் பேச முடியாது. வேலை பார்க்க வந்துள்ளோம். அதை மட்டும் செய்ய வேண்டும் எனச் செய்துவிட்டுப் போவோம். ஆனால் இந்தப் படம் என் கொள்கைகள் பேச முடிந்த படமாக அமைந்தது மகிழ்ச்சி. சுசீந்திரன் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக எடுக்கிறார். இன்னொரு கதை வைத்துள்ளார், அது வந்தால் இன்னும் மிகப்பெரிய படமாக வரும். விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர், தனக்கு என்ன வரும் என்பதில் தெளிவானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. வள்ளி மயில் எனப் பெண் கதாப்பாத்திர பெயரில் தலைப்பு வைத்ததற்கு மகிழ்ச்சி. அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு நன்றி.  இமான் பற்றி மிகச் சிறந்த விஷயங்கள் கேட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த ஒரு படத்திற்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்தார், உங்கள் மனதிற்கு நன்றி. ஃபரியா மிகச்சிறந்த நாயகி, எது சொன்னாலும் உடனே செய்வார். புதுமையான கதைக்களம். இப்படத்திற்காக உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்