sathyaraj

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நேற்று நடந்த 100வது நாள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதனையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் சுட்டதில் 11 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மேலும் 5 பேர் வரை கவலைக்கிடமாக உள்ளனர். இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்துக்கு ரஜினி, கமல், விஷால் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் சத்யராஜும் வீடியோ வடிவில் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில்.... "தூத்துக்குடியில் நடந்த கொடுமைக்கு எனது கண்டனத்தை பதிவுசெய்கிறேன்.

Advertisment

இறந்தவர்கள் அத்தனை பேருக்கும், அந்த குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை கூறிக்கொள்கிறேன். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். ஒன்றே ஒன்றை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா...? இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும், நம் தமிழ்நாட்டு மக்களும் முக்கியமா...? என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இது நெஞ்சத்தை பத பதைக்க வைக்கிறது. மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. இந்தக் கொடுமைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு, இறந்தவர்களுக்கு என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இதற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் ஒருவனாக" என்று கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.