Skip to main content

“மச்சான்... நீ மோடியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் டா...” - சத்யராஜ் பகிர்ந்த கதை

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

sathyaraj about amit sha in manivannan book release fuction

 

எழுத்தாளர்  ஜீவ பாரதியின், 'இயக்குநர் மணிவண்ணனும் நானும்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. அதில் மணிவண்ணனின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சத்யராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட அதன் முதல் பிரதியை மணிவண்ணனின் சகோதரி மேகலா பூபதி பெற்றுக்கொண்டார். 

 

பின்பு மேடையில் பேசிய சத்யராஜ், "செங்குட்டுவனை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு சந்தித்து பேசும்போது சொன்னார், 'மணிவண்ணன் அண்ணன் இருந்திருந்தால், அவர் அமித்ஷாவாகவும், நான்(சத்யராஜ்) மோடியாகவும் நடித்திருப்போம் என'. மேலும், செங்குட்டுவன் இதனை கதையாகவும் உருவாக்கி வைத்திருப்பதாக சொன்னார். அதற்கு, சனாதனம் என தலைப்பும் வைத்துள்ளார். ஆனால், இவர் இப்படி சொல்வதற்கு முன்பே, நான் பெரியார் படத்தின் வைக்கம் போராட்டம் காட்சியை எடுக்க கேரளா சென்றேன். அப்போது, என் நெருங்கிய நண்பன் நிழல்கள் ரவி வேறொரு பட ஷூட்டிங்கிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு நாள், ஒரே காரவனில் நான், நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்.

 

திடீரென, நிழல்கள் ரவி என்னிடம், 'மச்சான்... நீ மோடியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் டா' என சொல்ல 'டேய் சும்மா இருடா' என நான் தமாசாக சொன்னேன். ஆனால், மோடி, அப்போது குஜராத்தில் முதலமைச்சராகத் தான் இருந்தார். எனவே, செங்குட்டுவனுக்கு முன்பே நிழல்கள் ரவி இதனை சொல்லிவிட்டார். ஆகையால், ஒரு நடிகனுக்கு பல முகங்கள் தெரிவது சிறப்புதான். இதில் கொள்கை, சித்தாந்தங்களை எல்லாம் தவிர்த்து தான் பார்க்க வேண்டும். சமீபத்தில் கூட ஒரு இந்தி பட வாய்ப்பு வந்தது. அதில் சாய்பாபா கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார்கள். நான் சொன்னேன், 'நான் பழுத்த நாத்திகன். படம் நடித்துவிட்ட அடுத்த நாள் மேடையில் ஏறி கடவுள் இல்லை என பேசுவேன். எனவே இது உங்களுக்குத்தான் பாதிப்பா இருக்கும். நல்லா யோசிங்க' என்றேன். உதாரணத்திற்கு, கொள்கை ரீதியாக அணுகினால், பாகுபலி காலைத் தூக்கித்தான் கட்டப்பா தலையில் வைப்பாரே தவிர பிரபாஸ் காலைத் தூக்கி சத்தியராஜ் தலையில் வைக்கமாட்டார். 

 

சிவாஜி கூட கதாபாத்திரத்திற்காக, சிவக்குமார் அவரின் கால் கட்டை விரலை எடுத்துக் கடிக்கும் காட்சியில் நடித்திருப்பார். எனவே, நடிப்பிற்காக என்ன வேண்டுமானால் முயற்சிக்கலாம் என நடிகர் திலகம் சொல்லித்தந்து சென்றிருக்கிறார். நான் பொதுவாகவே புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தை படிக்காமல் கதை அளக்கும் பழக்கம் உண்டு. ஆனால், இந்த முறை முழுவதையும் படித்துவிட்டு குறிப்புகளுடன் வந்திருக்கிறேன். இதேபோல, சத்யா மூவிஸ் ராமவீரப்பன் தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை கோவையில் வெளியிட்டார். அந்த நிகழ்விற்கு தலைமை தாங்கியவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தான், அவர் எந்த புத்தகத்தை வெளியிட்டாலும் அதனை முழுதாகப் படித்துவிடுவார். 

 

ஆனால், நான் வாசித்துவிட்டு செல்லவில்லை. ஏனென்றால், நம்ம சத்யா மூவீஸ் வீரப்பன் தானே  நெருங்கியவர் தானே என்று சென்றுவிட்டேன். அதற்கு காரணம், அவர் தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளேன் என்றதால் வாசிக்காமல் வந்து பேசிவிடலாம் என்ற தைரியத்தில் வந்தேன். அந்த நிகழ்வில் நான் நடித்த தெய்வத் தாய் முதல் மந்திரப் புன்னகை படம் வரை பேசி எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டு மேடையில் அமர்ந்தேன். பக்கத்தில் இருந்த கிருஷ்ணராஜ் கேட்டார், 'புத்தகத்தை திறந்தே பார்க்கவில்லை போல' என கேட்டுவிட்டார். தொடர்ந்து, நீங்க ராமவீரப்பன் வரலாறை பேசாமல் உங்கள் அனுபவத்தை பேசியிருக்கிறீர்கள் எனவும் கேட்டுவிட்டார். இதனை ராமவீரப்பனும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

 

ஆனால், இந்த நிகழ்ச்சியில் வாசிக்காமல் வரமுடியாது. அதனால் குறிப்பு எழுதி வந்துள்ளேன். ஏனென்றால், எழுத்தாளர் ஜீவ பாரதி சற்று கோபக்காரர். பொதுவாகவே எனக்கு சில வித்தியாசமான வார்த்தைகளை வாசிக்கப் பிடிக்கும். என்னிடம் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தோழர் சாரு மஜூம்தார் புத்தகத்தை கொடுத்தார். அதன் பிறகு இந்த மணிவண்ணனும் நானும் புத்தகத்தில் தான் அந்த வார்த்தையை படிக்கிறோம். அன்று ஒரு இரவில் மணிவண்ணன் என்னிடம், 'சிலந்தியை விட ஒரு ஈ வலிமையில் குறைந்தது தான். அந்த ஈ சிலந்தி வலையில் சென்றால் அகப்பட்டு விடும். ஆனால், ஆயிரம் ஈக்கள் ஒன்று சேர்ந்தால் சிலந்தி வலை தகர்ந்து விடும்’ என மார்க்ஸ் சொன்னதை என்னிடம் சொன்னார். இன்று வரை அவர் கூறியது பசுமையாக மனதில் இருக்கிறது. நிகழ்வில் உதவி இயக்குநர் சினிமா ஆசை பற்றி ராசி அழகப்பன் நன்றாக பேசியிருந்தார். அவர் கூறிய கருத்து தான் எனது கருத்தும். 

 

என்னிடம் நிறைய பேர் கேட்பதுண்டு, சினிமாவிற்கு வரவேண்டும். அதற்கு உங்க அறிவுரை என்னவாக இருக்கும் என. நான் சொல்வேன், 'வராதீங்க' என்று. இதனை சிவக்குமார் என்னிடம் அறிவுறுத்தினார். காரணம் சினிமா மிகவும் சிக்கல் நிறைந்த விஷயம். பிற துறைகளில், ஒரு முறை மருத்துவம் படித்தால் மருத்துவர் ஆகிவிடலாம். அதேபோல பி.எ., பி.எல் படித்தால் வழக்கறிஞர் ஆகிவிடலாம். மாறாக, சினிமாவில் நீங்கள் தினம் தினம் வெற்றியை தர வேண்டும். ஆதலால், அந்த காலத்தில் கொடுத்த ஹிட்களை பேசுவதில் பயனில்லை. இந்த நிகழ் காலத்தில் என்ன செய்கிறோம் என்பது தான் சினிமா. இதற்கிடையில், பழைய நண்பர்கள் கலை, சங்கர் போன்றோரை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 

 

இந்த பழையகால நண்பர்கள் ஒன்று சேருவதே பெரும் சிக்கல் நிறைந்த ஒன்றுதான். ஏனெனில், எனக்கு தற்போது 69 வயதாகிறது. சமீபத்தில் நான் என்னுடன் 10வது படித்த நண்பர்களை சந்திக்கச் சென்றேன். வெளியுலகிற்கு நான் நடிகன் என்று தெரியும். ஆனால், நண்பர்களால் என்னை அடையாளம் காண முடியவில்லை. அந்த மாதிரியெல்லாம் இந்த நிகழ்வில் நடைபெறாமல், அனைவரும் தெரிந்தவர்கள் போலவே உள்ளனர். தொடர்ந்து தொடர்பில் இருந்தால் நினைவில் வைத்துக் கொள்ளலாம். தற்போது வாட்சாப் வந்தது மிகுந்த உதவியாய் இருக்கிறது. எனவே, சினிமாவிற்கு வர விரும்புவோர் நிரந்தர வருமானம் இருந்தால் வரலாம். மாறாக சினிமா வருமானத்தை நம்பிக்கொண்டு தயவுகூர்ந்து வர வேண்டாம். திரைப்படப் பாடல்களில் வருவது போல ஒரே பாடலில் முன்னேறி விட முடியாது. இதனை பலமுறை சிவக்குமார் என்னிடம் கூறியிருக்கிறார். இதுபோன்று நானும் சிவக்குமாரும் சின்ன தம்பி பெரிய தம்பி படப்பிடிப்பு முடிந்து நீலகிரி ரயில் நிலையம் சென்றோம். சிவக்குமார் ரயில் வரும் முன்பே வந்துவிடுவார். அவர் ரயில் நிலையம் வந்தபோது இருந்த மக்கள் பரபரப்பு, கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். கடைசியில், 'அந்தப் பக்கம் சிவக்குமார் இருக்கிறார் பா' என்ற நிலைக்கு மாறும். இதே பழக்கம் தான் அவர் படப்பிடிப்பிலும் கடைபிடிப்பார். இந்த பழக்கத்தை சிவாஜியிடம் இருந்து சிவக்குமார் கற்றுக்கொள்ள அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.