faasgsgs

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘காலா’. 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தப் படத்தினையும் இயக்காத ரஞ்சித், தயாரிப்பில் கவனம் செலுத்திவந்தார். அவரது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு, நடிகர் ஆர்யாவை வைத்து ரஞ்சித் படம் இயக்கும் முயற்சியில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. பின்னர் இத்தகவலை இயக்குநர் ரஞ்சித் உறுதி செய்தார். வடசென்னை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி இப்படமானது உருவாகிவந்தது. 'சார்பட்டா பரம்பரை' எனப் பெயரிப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.

Advertisment

இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. இப்படத்தின் பின்தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெறும் நிலையில், ‘சார்பட்டா’ படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், அனைத்து பின்தயாரிப்பு வேலைகளும் முடிந்து ரிலீசுக்குத் தயாராகவுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே ஆர்யா நடித்த 'டெடி' படமும் ஓடிடியில் வெளியானது குறிப்படத்தக்கது.