SAROJA DEVI

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

எஸ்.பி.பி. உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண், அவர் உடல்நிலை சீராக உள்ளதாக விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி இன்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி. பாடலை ஒலிக்கச்செய்து கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், பழம்பெரும் நடிகை சரோஜா தேவி எஸ்.பி.பி. குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “பாலுவிற்கு உடல்நிலை சரியில்லை எனக் கேள்விப்பட்டேன். ரொம்ப சங்கடப்பட்டேன். அவர் அவ்ளோ நல்ல மனிதர். ஒரு விழாவில் அவரிடம் நீங்க தேன் சாப்பிடுவீங்களானு கேட்டேன். ஏன் அப்படிக் கேட்கிறீங்கன்னு கேட்டார்.

Advertisment

இல்ல, உங்க குரல் அவ்ளோ இனிமையா இருக்குதுன்னு சொன்னேன். அதற்கு அவர் ஏன் நீங்களும் தான் அழகாக இருக்கீங்கனு சொன்னார். அவர் உடல்நலம் சரியில்லாம இருப்பதைப் பார்த்து இந்தியாவே கவலைப்படுது. என் ஆயுளையும் சேர்த்து அவருக்குக் கொடு எனக் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அவர் நல்லபடியாகக் குணமடைந்து மீண்டும் வந்து பாடணும், ரொம்ப வருஷம் பாடணும்” என்று தெரிவித்துள்ளார்.