பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி, மாமியார் வீடு உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன். அப்போது தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் வலம் வந்துள்ளார். பின்பு பருத்திவீரன் படத்தில் செவ்வாழை கதாபாத்திரம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இப்போது முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனிடையே 15 வருடங்களுக்கு பிறகு ‘சட்டமும் நீதியும்’ வெப் தொடர் மூலம் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த சீரிஸ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

Advertisment

திரையுலகில் 35 ஆண்டுகளை கடந்து நடித்து வரும் சரவணன், தற்போது அவரது சொந்த ஊரான சேலத்தில், ஒரு கோயில் கட்டியுள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் உள்ள வட்டக்காடு கிராமத்தில், விநாயகர் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அதற்கு அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் என்று பெயர் சூட்டிய அவர், கோயிலின் கும்பாபிஷேக விழாவை வரும் 27ஆம் தேதி நடத்தவுள்ளார். 

கும்பாபிஷேகம் நடக்கும் அதே நாளில் ‘சேலம் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி’ என்ற பெயரில் படப்பிடிப்புத்தளம் ஒன்றையும் அவர் தொடங்குகிறார். இதன் திறப்பு விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் கலந்து கொள்கிறார். சரவணன் கடைசியாக நடித்த ‘தலைவன் தலைவி’ படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.