இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். திருநெல்வேலி அருகே பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளைச் சென்னையில் படமாக்கினார், இயக்குநர் மாரி செல்வராஜ்.
தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததையடுத்து, படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பின்னணி இசைக்கோர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ‘கர்ணன்’ படம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கர்ணன் படம் பார்த்தேன். வியந்துபோனேன். தனுஷ், மாரி செல்வராஜ், வி கிரியேஷன்ஸ் மற்றும் அற்புதமான குழுவினர் அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். கர்ணன் - அனைத்தும் கொடுப்பான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.