கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் மூலம தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். இதனைத் தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டில் இருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இவருடைய வயது 37, கடந்த 2016ஆம் ஆண்டுதான் உமையாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
சேதுராமன், தோல் மருத்துவ நிபுணராகவும் அறியப்படுகிறார். எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சந்தானத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர் இவர்.
இந்நிலையில் அவரது மறைவிற்கு சந்தானம் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. என்னுடைய உயிர் நண்பன் டாகடர் சேதுவை இழந்தது மன அழுத்தத்தைத் தருகிறது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.