கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், ஓராண்டைக் கடந்தும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இடைப்பட்ட காலத்தில் பரவலின் வேகம் குறைந்திருந்த நிலையில், தற்போது கரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், ஆலியா பட் நடித்து வரும் 'கங்குபாய் கதியாவாதி' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவந்தார். இதனையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு இன்று காலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சஞ்சய் லீலா பன்சாலிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை ஆலியா பட், ரன்பீர் கபூருடன் இணைந்து ‘ப்ரம்மாஸ்திரா’ படத்தில் நடித்து வருகிறார். இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகை ஆலியா பட் அவசர அவசரமாக தன்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறார்.
படக்குழுவினரில் மற்றவர்கள் யாரேனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்த தகவல் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.