Skip to main content

சிகிச்சைக்கு முன் பட வேலைகளை முடிகிறாரா சஞ்சய் தத்?

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
cs

 

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 8ஆம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 10ஆம் தேதி அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய உடல்நலம் மற்றும் திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

அதில், "வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியுள்ளார். அவருடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அதிகாரபூர்வமாக எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ காரணங்களுக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சமூக வலைதளத்தில் சஞ்சய் தத் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் சஞ்சய் தத் நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலரும் சஞ்சய் தத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சஞ்சய் தத் சமீபத்தில் நடித்த 'சடக் 2' படத்தில் அவருடைய டப்பிங் வேலைகள் குறித்து தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த வாரத்துக்குள் 'சடக் 2' திரைப்படத்தின் கடைசி கட்ட டப்பிங் வேலைகளை சஞ்சய் முடிப்பார் எனவும், அதன் பின் மருத்துவ ஓய்வில் செல்லவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மகேஷ் பட் இயக்கி, அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் நடித்திருக்கும் 'சடக் 2' இதுவரை யூடியூபில் அதிகம் டிஸ்லைக் பெற்றுள்ள ட்ரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
 

சார்ந்த செய்திகள்