மலையாளத்தில் விமர்சன ரீதியாக கவனிக்கப்படும் படங்களை இயக்கியவர் இயக்குநர் சனல் குமார் சசிதரன். இவர் இயக்கிய எஸ். துர்கா, சோழா உள்ளிட்ட படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

Advertisment

இதனிடையே அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருவார். கடந்த 2022ஆம் ஆண்டு மஞ்சு வாரியரை காணவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக மஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து டோவினோ தாமஸை வைத்து அவர் இயக்கிய வழக்கு படத்தை தியேட்டரில் வெளியாகுவதற்கு முன்பாகவே அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு காரணமாக டோவினோ தாமஸ் தான் படத்தை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மஞ்சு வாரியரை வைத்து அவர் இயக்கிய கயட்டம்(A‘hr Kayattam)படத்தின் கூகுள் ட்ரைவ் லிங்கை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இது மலையாளத் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து கடந்த ஜனவரியில் இவர் மீது பிரபல மலையாள நடிகை ஒருவர், ஆன்லைன் வாயிலாக துன்புறுத்துவதாகவும் பின்பு மிரட்டலும் விடுவதாகவும் குற்றம் சுமத்தினார். இது தொடர்பாக கொச்சி காவல் நிலையத்தில் சனல் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது சனல் குமார் அமெரிக்காவில் இருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் மும்பை விமான நிலையம் வந்த சனல் குமாரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் மும்பையில் உள்ள சஹார் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். விசாரணைக்காக அவரை காவலில் எடுக்க கேரளாவில் உள்ள எலமக்கரா காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கைது குறித்து சனல் குமார் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு விஷயஙக்ளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் விமானத்தில் கைது செய்த பிறகு அவர் வெளியிட்ட ஒரு பதிவில், “காவலில் நான் இருக்கிறேன். இங்கே தண்ணீரும் இல்லை, உணவும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

Advertisment