இயக்குநர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சித்திரைச் செவ்வானம்’. நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா நாயகியாக அறிமுகமாகும் இப்படம் பிரத்யேகமாக ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, சமுத்திரக்கனி, பூஜா உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், "இந்தப் படத்தில் வேலை செய்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜீ5 நல்ல கதைகளை மட்டும் தேடித் தேடி செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. என் தம்பி சில்வா, நானும் அவனும் எதிரெதிர் வீட்டில்தான் இருந்தோம். அவனைப் பல வருடங்களாக தெரியும். ‘அப்பா’ படத்திற்கு, அப்பா பற்றி பேசுங்கள் என்று நிறைய பேரிடம் கேட்டிருந்தேன். அவன் பேசியதைக் கேட்டு அதிர்ந்துவிட்டேன். அவன் அப்பா தவறிவிட்ட ஏக்கத்தைப் பேசியிருந்தான். இப்படத்தில் அந்தக் குழந்தை கை தூக்கி தன் அப்பா விரலைப் பிடிக்கும். அதில் நான் அப்பாவாக இருந்தேன், அவன் மகனாக இருந்தான். அவ்வளவுதான் எங்களுக்குள்ளான உறவு. இந்தக் கதை என்னை உலுக்கியது, இந்தப் படம் சமூகத்தைக் கேள்வி கேட்கும். இந்தப் படத்தில் விஜய் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. அவன் ஒரு நல்ல ஆத்மா. பூஜா சில காட்சிகளில் நம்மையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார். அவர் இன்னும் பெரிய தளத்திற்குச் செல்வார். ரீமா, இப்போது அவரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும், கண்ணிலேயே பேசுவார். இதில் நடித்த குட்டீஸ் எல்லாம் சூப்பராக செய்திருக்கிறார்கள். சில்வாவின் மகன் இப்படத்தில் நடித்திருக்கிறார் அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. இன்று உங்களுடன் இணைந்து படத்தைப் பார்க்கப் போகிறேன். உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்" எனக் கூறினார்.