Skip to main content

“சுழற்சியை நோக்கி நகரும் விஜய்யின் பின்னால் நான் நிற்பேன்” - சமுத்திரக்கனி திட்டவட்டம்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
samuthirakani about vijay political entry

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.  

அப்போது விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எப்போதும் விஜய்க்கு ஆதரவு தருவேன். ஒரு படத்துக்கு 200 கோடி சம்பாதிக்கக் கூடிய மனிதன், நடிக்கிறதை நிறுத்துறேன் என சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். தெலுங்கில் பவன் கல்யாணுடன் வேலை பார்த்திருக்கிறேன். அவரும் அரசியல் தளத்தில் தான் இருக்கிறார். அவர் கூட அப்படி சொல்லவில்லை. கையில் மூனு படம் வச்சிருக்கார். தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்காங்க. வரேன்னு சொல்லியிருக்காங்க. யாருமே நடிப்பை நிறுத்தவில்லை. விஜய் முழுக்க முழுக்க மக்களுக்காக சேவை செய்கிறேன் என சொல்கிறார். இப்படி சொல்கிற தைரியம் யாருக்குமே வரவில்லை. அந்த தைரியத்திற்கே முதலில் ஒரு சல்யூட். அதன் பிறகு என்ன வேணும்னாலும் குறை சொல்லலாம்.  

படம் இல்லாமல் தோத்து போய் அவர் வரவில்லை. அவர் நிறைய சம்பாதிச்சு வச்சிருக்கார். ஏதோ ஒன்னு செய்வோம் என்றுதானே வருகிறார். அவருக்காக 100 தயாரிப்பாளர்கள் கூட காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலில் அவர் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள், நல்ல விதமாக அமைய வேண்டும். அதற்கு இந்த பிரபஞ்சம் ஆதரவு தர வேண்டும். எல்லாம் கூடி வந்து அவர் நினைக்கிறது இந்த மக்களுக்கு போய் சேரணும். நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான், குறிப்பிட்ட காலம் வரை இந்த சமூகத்திலிருந்து வாங்குங்க. ஒரு காலத்திற்கு பிறகு வாங்கினதை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுங்க. அதுதான் நீ சமூகத்திற்கு வந்ததற்கான ஒரு சுழற்சி. அதை நோக்கி ஒரு மனிதர் நகர்கிறார் என்பது சந்தோஷம். நல்ல தளத்தில் அவர் இயங்கினால் பின்னால் போவதில் தப்பில்லை. நான் கூட போவேன். அதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம். 

எல்லா வகையிலும் தமிழக இளைஞர்கள், மக்கள் அனைவரும் பதட்டமாகத்தானே இருக்காங்க. குழப்பமா, சர்ச்சையோடே ஒரு பீதியில் தானே இருக்காங்க. அந்த பீதியை சரி செய்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய நிலைக்கு யார் வந்தாலும், அவங்க பின்னாடி நிற்பேன்” என்றார். முன்னதாக விஜய் தனது கட்சி பெயர் அறிவித்தபோது, சமுத்திரக்கனி அவரது எக்ஸ் பக்கத்தில், “திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா ” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

“இங்கு சரி செய்ய வேண்டியது அப்பாக்களைத் தான்” - சமுத்திரக்கனி 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
samuthirakani speech in Ramam Ragavam Teaser Launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த  விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சமுத்திரக்கனி பேசுகையில், “அப்பா கதை என்றாலே கேட்டுவிடுவது. அப்படித்தான் இந்த கதையையும் கேட்டேன். அப்பா மகன் உறவை புரிந்து கொள்ளவே முடியாது. நிறைய அப்பாக்கள் என்னிடம், மகனை பற்றி பேசியிருக்கிறார்கள். பத்து நாள் முன்னாடி கூட சிவகாசியில், ஒரு அப்பா, அவரின் மகனிடம் பேசச் சொன்னார். ஃபோனில் கேம் ஆடிக்கொண்டே இருக்கிறான், தப்பான வழியில் போய்விடுவானோ என பயமாக இருப்பதாக சொன்னார். பையனிடம் பேசினேன். அவனுக்கு ரொபோட்டிக் ரொம்ப பிடிக்கும் என்றும் அதை அவனே தயாரிக்கப் போவதாகவும் சொன்னான். 

அதோடு அதை அப்பாவால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றான். உடனே அவனின் அப்பாவிடம் பத்து நிமிஷம் பேசினேன். இங்கு சரி செய்ய வேண்டியது அப்பாக்களைத் தான். மகன் என்னமோ செய்ய வேண்டும் என நினைக்கிறான். அதை செய்யவிடுங்கள். உங்களுடைய அறிவை அவன் மூளையில் திணிக்காதீர்கள். எல்லோரும் அவரவர் இடத்தில் மிகச் சரியாக இருக்கிறார்கள்” என்றார்.  

Next Story

“மேக்கிங் தேவையில்லை; எமோஷனே போதும்” - வெற்றி குறித்து சூரி    

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
soori speech at samuthirakani Ramam Raghavam Teaser launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த டீசர் விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சூரி பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது என்னுடைய கேரக்டரில் நடித்து, இங்கு என்னைவிட அங்கு அதிக வரவேற்பை பெற்றவர் தனராஜ். அப்போது முதல் என்னுடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்கு ஃபோனில் பண்ணி பேசுவார். நிமிர்ந்து நில் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது கூட நிறைய பேசுவோம். நான் பேசுவது அவருக்கு புரியாது, அவர் பேசுவது எனக்கு புரியாது. விடுதலை பார்த்துவிட்டு அரை மணிநேரம் பேசினார். டைரக்டர் எல்லாம் நடிகராக மாறிவரும் காலத்தில் ஒரு காமெடி ஆக்டர் டைரக்டராகி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.  

காமெடி நடிகரா ஒரு கூடுதல் நன்மை என்னவென்றால், ஹீரோவை விட அதிக படங்களில் நடித்திருப்போம். அதனால் நிறைய டைரக்டர்களுடன் வேலை பார்த்திருப்போம். அவர்களிடமிருந்து எதாவது ஒன்று தனராஜ் கத்துக்கிட்டு இருப்பார். அதை எல்லாமே இந்த படத்தில் பதிவு செய்திருப்பார் என நம்புறேன். பொதுவாக அப்பா மகன் கதையென்றால், மேக்கிங் பெரிதாக தேவையில்லை. இருவருக்கும் இடையிலான எமோஷன்களை சரியாக பதிவு செய்தால் போதும். அப்படி பதிவு செய்த படங்கள் தோற்றதில்லை. உதாரணத்திற்கு அப்பா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாரடி நீ மோகினி, முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு என சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் இந்த படத்திலும் அப்பா மகன் எமோஷனை நன்றாக காட்டியிருப்பது போல் தெரிகிறது. அதனால் இந்த படமும் தோற்காது. சமுத்திரக்கனியை உண்மையான ஹீரோ என அவரிடம் பழகும் நிறைய பேர் சொல்வார்கள். அந்த வகையில் எனக்கும் அவர் ஹீரோ மாதிரி தான். எப்போதுமே பாசிட்டிவாக இருப்பார்” என்றார்.