Skip to main content

"நீங்க யாருனு தெரியலயே அப்டின்னு விஜய் சொல்லிட்டாரு” - சம்பத் ராம் பகிரும் திரை அனுபவம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

 Sampath Ram Interview

 

தன்னுடைய திரையுலக அனுபவங்கள் பலவற்றையும் நம்மோடு நடிகர் சம்பத் ராம் பகிர்ந்து கொள்கிறார்.

 

தீனா படத்தில் அஜித் உடன் படம் முழுவதும் பயணிக்கும் கேரக்டர் கிடைத்தது. அந்தப் படத்தில் அஜித் ஓட்டும் புல்லட் என்னுடையது தான். என்னை விட என்னுடைய புல்லட்டுக்கு தான் அந்தப் படத்தில் அதிக சம்பளம். மக்களிடையே எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. ரசிகர்கள் அஜித் மீது எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் என்பது அப்போது புரிந்தது. உன்னைக் கொடு என்னைத் தருவேன் படத்தில் தான் முதலில் நான் அஜித் உடன் நடித்தேன். அப்போதிருந்தே அவர் சாதாரணமாகத் தான் இருப்பார். ஆனால் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி அவரிடம் எப்போதும் இருந்தது. அவருடைய தன்னம்பிக்கை நம்மை வியக்க வைக்கும்.

 

அஜித் இப்போதும் என்னிடம் அதே அன்புடன் பழகுவார். விஜய் மிகவும் அமைதியானவர். தமிழன் படத்தில் முதலில் அவருடன் நடித்தேன். என்னுடைய திருமண அழைப்பிதழை அவரிடம் கொடுக்கச் சென்றபோது அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அப்போது அது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு எதார்த்தத்தை நான் புரிந்துகொண்டேன். அதன் பிறகு விஜய் என்னுடன் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். புலி படத்தில் நடித்தபோது அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற என்னுடைய ஆசையை நிறைவேற்றினார். 

 

விக்ரம் படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. அப்படிக் கிடைத்தது தான் மாளிகப்புரம் என்கிற மலையாளப் பட வாய்ப்பு. அது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. விக்ரம் படத்தினால் ஹாலிவுட் பட வாய்ப்பு கூட வந்தது. முதலில் தயங்கினாலும் பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டேன். தங்கலான் படத்தில் தற்போது விக்ரம் உடன் நடித்து வருகிறேன். விக்ரமின் டெடிகேஷன் மிகப்பெரியது. மிகப்பெரிய உழைப்பாளி அவர். தனக்கு அடிபட்டது குறித்து வெளியே கூட சொல்லமாட்டார். காலில் செருப்பு கூட போடாமல் காடு, மலைகளில் நடித்து வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்