Skip to main content

நாக சைதன்யா புது காதல் குறித்து வெளியான செய்தி - சமந்தா மறுப்பு

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

samantha about Naga Chaitanya Sobhita Dhulipala dating rumours

 

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சமீப காலமாக தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்பு சற்று உடல்நலம் தேறி தற்போது பழையபடி மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். அதன்படி தற்போது விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் வருண் தவான் நடிப்பில் உருவாகும் 'சிட்டடேல்' வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

 

இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படம் வருகிற 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனால் இப்பட ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் சமந்தா அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா குறித்து கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் நாக சைதன்யா - நடிகை சோபிதா இருவரும் காதலித்து வருவதாகவும் இருவரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாவது குறித்தும் கேட்கப்பட்டதாகவும் அதற்கு பதிலளித்த சமந்தா, "யார் யாருடன் உறவில் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு கவலை இல்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் கண்ணீரில் மூழ்கி விடுவார்கள். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டு, அப்பெண்ணை காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால் அனைவருக்கும் நல்லது" என்று பதிலளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

 

இந்த நிலையில் இந்த செய்திகளில் குறிப்பிட்டிருக்கும் தகவலை நான் சொல்லவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக இதே கேள்வி குறித்து செய்திகள் வெளியானது. அப்போதும் அந்த செய்திகள் குறித்து தனது பதிலை அளித்த சமந்தா, "பெண்கள் மீதான வதந்திகள் என்றால் அது உண்மையாக இருக்கும். ஆண்கள் மீதான வதந்திகள் என்றால் அது பெண்களால் உருவாக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களே இதனைக் கடந்து சென்றுவிட்டனர். நீங்களும் கடந்து செல்லுங்கள்" என காட்டமாக பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா மற்றும் சமந்தா முதல் முறையாக இணைந்து நடித்தனர். இதனைத் தொடர்ந்து சமந்தா - நாக சைதன்யா இருவரும் இணைந்து 'மனம்', 'ஆட்டோ நகர் சூர்யா' போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் விவகாரத்தை அறிவித்து பிரிந்தனர். அதன்படி இருவரும் பிரிந்து தங்களது தொழிலில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்