Skip to main content

தற்கொலை சம்பவம்;  நீதிமன்றத்தை நாடிய சல்மான் கான் 

Published on 23/05/2024 | Edited on 23/05/2024

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான், மும்பை பாந்த்ரா நகரில் வசித்து வருகிறார். இத்தகைய சூழலில் கடந்த மாதம் 14ஆம் தேதி, அவரது வீட்டின் முன் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்த இரண்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். பின்பு அந்த இரண்டு நபர்கள் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) எனக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்தனர். அவர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அவர்களுக்கு உதவிய அனுஜ் தாபன் மற்றும் சோனு சுபாஷ் உட்பட 11 பேரை போலிஸார் கைது செய்தனர். 

இதில் அனுஜ் தாபன் என்பவர், கஸ்டடியில் இருக்கும் போது கடந்த மே 1ஆம் தேதி இறந்துள்ளார். அவர் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனுஜ் தாபன் தாயார், தன் மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகனின் மரணம் குறித்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் சல்மான் கான், அனுஜ் தாபனின் தாயார் தாக்கல் செய்த மனுவில் தனது பெயரை நீக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக சல்மான் கானின் வழக்கறிஞர் கூறியதாவது, “உண்மையில் இந்த வழக்கில் சல்மான் கான் தான் பாதிக்கப்பட்டவர். அவரை குறிவைத்து தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என அவருக்குத் தெரியவில்லை. யார் கைதானது கூட தெரியவில்லை. அதனால் சல்மான் கான் மேல் குற்றம் சொல்வது, தவறான ஒன்று. அதோடு அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலாகவும் இருக்கிறது” என்றார். 

சார்ந்த செய்திகள்