கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் பிரேமம். இதில் மலர் டீச்சராக நடித்து சாய் பல்லவி அனைத்து இளைஞர்களையும் கவர்ந்தார். இதனை அடுத்து தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இதுவரை இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவருக்கு வெளியான படம்தான் மாரி-2. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இதையடுத்து, தெலுங்கில் ஷ்ரவானந்த், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘படி படி லெச்சே மனசு’. ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஸ்ரீலக்ஷுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
மாரி-2 வெளியான அதே நாளில் தெலுங்கில் வெளியான இந்தப் படம் ரூ 22 கோடிக்கு வியாபராமாகியுள்ளது. ஆனால், 8 கோடிதான் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த சாய் பல்லவியிடம் சம்பளத்தில் ஒரு பகுதியை முதலில் கொடுத்த தயாரிப்பாளர், மீதமுள்ள ரூ.40 லட்சம் பணத்தை ரிலீசுக்குப் பிறகு தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், வசூலில் படம் தோல்வியடைந்தாலும், சாய் பல்லவியின் மீதி சம்பளத்தை தர தயாரிப்பாளர் முயன்றுள்ளார். ஆனால் தற்போதைய நிலைமையில் அந்தத் தொகையை தன்னால் பெற்றுக்கொள்ள முடியாது என்றும், வசூலில் நஷ்டம் ஏற்பட்டதில் தானும் பொறுப்பேற்பதாகவும் தயாரிப்பாளரிடம் சாய் பல்லவி கூறியுள்ளார்.