
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் அவர் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிப்பதற்காக புகுந்துள்ளார். அப்போது அவருடன் ஏற்பட்ட தகராறில் சைஃப் அலி கானுக்கு ஆறு இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. அந்த மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
பின்பு படுகாயமடைந்த சைஃப் அலி கான் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவருக்கு முதுகு தண்டுவடத்தின் அருகே ஒரு கத்திக்குத்து ஆழமாக இறங்கியதால் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது உடலில் கத்தியின் ஒரு துண்டு அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்பு அபாயக்கட்டத்தை தாண்டி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து குத்திய நபரை போலிஸார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சைஃப் அலிகான் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரை அவரது மனைவி மற்றும் நடிகை கரீனா கபூர் அழைத்துச் சென்றார்.