கவுதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி, காளி வெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கார்கி' திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சாய் பல்லவி பேசுகையில், “கார்கி படத்தை சூர்யா சாரின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது. அவர் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்ற விஷயம் எனக்கு தெரியாது. ஒருநாள், சூர்யா சாருடன் இருக்கும் போட்டோவை இயக்குநர் எனக்கு அனுப்பினார். நான் ஏதோ டப்பிங் ஸ்டூடியோவில் எடுத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். விராட பருவம் படத்தின் ப்ரோமோஷனில் இருந்தபோது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இருக்கிறது, வந்துவிட்டு போகமுடியுமா என்று கேட்டார்கள். நானும் உடனே கிளம்பிவந்தேன். அதற்காக ஒரு இடத்திற்கு சென்றபோது இது சூர்யா சாருக்கு சொந்தமானதாக இருக்குமோ என்று சின்ன யோசனை வந்தது.
அப்போது அங்கு சூர்யா சார் இருந்தார். அவருக்கு பின்னால் இருந்து ஜோதிகா மேம் வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு பேச்சே வரவில்லை. இது மாதிரியான படங்களை ப்ரோமோட் செய்ய வேண்டும், இது மாதிரியான படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவரது எண்ணம் பெரிய விஷயம். சினிமா குறித்த இத்தகைய எண்ணம் கொண்டவரோடு இந்த வகையில் இணைந்தது ரொம்பவும் மகிழ்ச்சி. கார்கி திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள்” எனத் தெரிவித்தார்.