"தமிழுக்கும் விரைவில் படம் பண்ண வாங்க" - பிரபல இயக்குநருக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு

S R Prabhu

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

அந்த சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், "கே.ஜி.எஃப் படம் வெளியான போது அந்தப் படத்தை சுற்றி நிறைய படங்கள் இருந்தன. அதையெல்லாம் தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பு பெற்று அந்தப் படம் எப்படி இவ்வளவு பெரிய ஹிட் அடித்தது என்பதை இன்றைக்கும் நிறைய பேர் ஆச்சர்யமாக பேசுகிறார்கள். பிரம்மாண்டத்தின் மீது நமக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். ஷங்கர், ராஜமௌலி வரிசையில் பிரசாந்த் நீல் அனைவரும் பிரம்மிக்கும் வகையிலான ஒரு படத்தை கொண்டுவந்து நிறுத்தினார். இதை எப்படி அவர் யோசித்தார் என்பதே ஆச்சர்யமாக உள்ளது.

படத்தில் ஒவ்வொரு டயலாக்கும் பிரம்மாண்டமாக உள்ளது. நான் ஏன் இவ்வளவு பிரம்மாண்டத்தை பயன்படுத்துகிறேன் என்றால் படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது. படம் பார்க்கும்போது நீங்களும் அதை உணர்வீர்கள். யாஷ் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாத்துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நடிகராக மாறியுள்ளார். பிரசாந்த் நீல் தெலுங்கில் படம் பண்ணுகிறார். தமிழிலும் அவர் விரைவில் படம் பண்ண வேண்டும்" எனப் பேசினார்.

Prashanth Neel sr prabhu
இதையும் படியுங்கள்
Subscribe