ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ‘உருட்டு உருட்டு’. நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்பு நடந்தது.
இந்நிகழ்வினில் இயக்குநர் ஆர்வி. உதயகுமார் பேசியதாவது, “எனது இனிய நண்பர் கஸ்தூரி ராஜா ஊரின் மாப்பிள்ளை நான். அவரும் நானும் ஒன்றாக படமெடுக்க ஆரம்பித்தோம். அவர் தைரியத்துக்கு நான் ரசிகன், தன் எல்லாப்பணத்தையும் வைத்து ரிஸ்க் எடுத்து, தனுஷை வைத்து படமெடுத்தார். இப்போது ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார். எங்களுக்கு ரசனையில் தான் போட்டி இருந்தது, யார் படம் வசூல் எனப் போட்டி இருந்ததில்லை. யாருக்கு பிள்ளைகள் நல்லா இருப்பார்கள்னா, தான் நியாயமா நேர்மையா ஒரு தொழில்ல சாதிச்சு, அடுத்தவங்களுக்கு உதவி பண்ணி, தன் பிள்ளைகளை தன் கஷ்டத்தை உணர வைத்து, யார் வளர்க்கிறானோ அவன் குழந்தைங்க தான் சிறப்பா இருக்கும். அது சினிமாவிலும் சரி வெளியிலயும் சரி, கஷ்டத்தை உணர்ந்த பிள்ளை ஆனந்த் பாபுவுடைய புதல்வர் கஜேஷ். கண்டிப்பாக நீ பெரிய அளவில் வருவாய்.
குழந்தைகளுக்கு வளரும்போது பணிவு வேணும், நிறைய பேர் அந்த பணிவை கடைசில விட்டுடுறாங்க, நீ அன்போடு நேசித்து எல்லாரிடமும் பணிவா இருக்கனும், அப்படி இருந்தது தான் ரஜினிகாந்தின் வெற்றி காரணம். ரஜினி சார் தன்னை ஹீரோவா ஒரு படத்தில போட்ட பெரியவர் கஷ்டப்படுறார் என்று அவரைக் கூப்பிட்டு ஒரு வீடு வாங்கி கொடுத்தார் அதான் கலைஞானம். நமக்கு உதவி செய்தவர்களையோ, நம்மை நேசித்தவர்களையோ, நாம் மறக்கக் கூடாது” என்றார்.