Skip to main content

படம் பார்க்க வாங்க... சொந்த படத்திற்கு தியேட்டரில் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர்...

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

விஷாலின் அயோக்யா, ஃபைனான்ஸ் பிரச்சனைக் காரணமாக நேற்று படம் ரிலீஸாகாமல், பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இன்று வெளியானது. இதைபோலவே அதர்வா நடித்த 100 படமும் மே 9ஆம் தேதி ஃபைனான்ஸ் பிரச்சனையால் வெளியாகாமல், இன்று வெளியானது. கீ படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு நேற்று அறிவித்த தேதியில் வெளியானது. அதுவும் காலை காட்சி தடையாகி, மதியத்திலிருந்துதான் வெளியானது.
 

producer

 

 

இத்திரப்படங்கள் மட்டுமல்லாமல்  எங்கு சென்றாய் என் உயிரே, உண்மையின் வெளிச்சம், வேதமானவள், காதல் முன்னேற்றக் கழகம் ஆகிய படங்களும் நேற்று வெளியாகின.
 

இந்நிலையில் எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி. பாண்டி, தியேட்டர் வாசலில் நின்று கொண்டு தன் படத்தை பார்க்க வாங்க என்று ரசிகர்களை அழைத்து, தானே டிக்கெட் வாங்கி அதை குறைந்த விலைக்கு மக்களிடம் கொடுத்து படத்தை பார்க்க வைத்திருக்கிறார்.
 

மேலும், படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் விலையுடன் 100 ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். சிறு படங்களுக்கும் தயவு செய்து ஆதரவளியுங்கள் என்று பாண்டி பார்வையாளர்களிடம் கெஞ்சிக் கேட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீடியாக்களுக்கு கண்டனம் தெரிவித்து கோரிக்கை வைத்த பாரதிராஜா!

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Bharathiraja who condemned the media and made a request!

 

தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் மாரிமுத்து. சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. அவரது மகள் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். 

 

இருவரது இறுதிச்சடங்கிலும் செய்தி மற்றும் யூடியூப் சேனல்கள் குவிந்திருந்து செய்திகளை தந்த வண்ணம் இருந்தது. ஆனால் சில சேனல்கள் அநாகரிகமாகவும் நடந்து கொண்டனர். இறந்தவர்களைப் பற்றி நீங்கள் எதாவது சொல்லுங்களேன் என்று சோகத்தில் இருப்பவர்கள் முன் மைக்கை நீட்டி அவர்களது பேட்டிகளை கேட்டு தொல்லை தந்தனர். 

 

ஊடகங்களின் வரம்பு மீறிய இந்த செயலைக் கண்டித்தும், கோரிக்கை ஒன்றையும் தமிழ்த்திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது. அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள், உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும். அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது”

 

“உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீபகால மீடியாக்களின் செயல். புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது. வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது. அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது. முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும். கூடாதென்று”

 

“இப்போது சமூக வலைத்தளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது. ஊடகங்கள் மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடுவதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா?. நேற்று... இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது".

 

"குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன. இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால்... காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும். அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரீகங்கள் தடுக்கப்படும்.

 

ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்றிருக்கிறார்.


 

Next Story

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மீது புகார்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Complaint against actor Redin Kingsley

 

'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி, 'டாக்டர்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் 'லெக்பீஸ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தற்போது நடிக்க மறுத்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. 

 

இது தொடர்பாக 'லெக்பீஸ்’ பட தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரில், 'லெக்பீஸ் படத்தில் 10 நாட்கள் நடிக்க ரெடின் கிங்ஸ்லிக்கு முழு சம்பளமும் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் 4 நாட்கள் மட்டுமே நடித்துவிட்டு, மீதி நாட்களில் நடிக்க மறுத்து வருகிறார். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால், அந்த நஷ்டத்தை அவர் திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவர் நடித்துக் கொடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக ரெடின் கிங்ஸ்லி விளக்கம் தர வேண்டி தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.