விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ். இவர் கடந்த மார்ச் மாதம் விமானம் மூலம் துபாயில் இருந்து பெங்களூரூவுக்கு 14.8 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கடத்தி வந்தார். இதை சோதனையில் கண்டுபிடித்த வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அவரை கைது செய்தது. இதையடுத்து இந்த கடத்தலில் தொடர்புடைய ரன்யா ராவின் நண்பரும் தெலுங்கு நடிகருமான தருண் ராஜூ, தொழிலதிபர் சாகில் சகரியா ஜெயின் மற்றும் பரத் குமார் ஜெயின் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். பின்பு நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தவறியதால் ரன்யா ராவுக்கு கடந்த மே மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் ரூ. 2 லட்சம் பிணை பத்திரமும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்டாலும் ரன்யா ராவ் காவலில் தான் இருந்து வந்தார். அவர் மீது அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டதால் அவரால் வெளியே வரமுடியவில்லை.
இதையடுத்து அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள ஆலோசனை வாரியம் ரன்யாவிற்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், தண்டனைக் காலம் முழுவதும் ஜாமீன் கோர முடியாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை, வரும் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் வரவுள்ளது.
இந்த நிலையில், ரன்யா ராவ் மீது வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.102 கோடி அபராதம் விதித்துள்ளதாக டிஆர்ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அவருடன் சேர்ந்து, தொழிலதிபர் தருண் கொண்டராஜுவுக்கு ரூ.63 கோடியும், நகைக்கடைக்காரர்கள் சாஹில் சகரியா ஜெயின் மற்றும் பரத் குமார் ஜெயின் ஆகியோருக்கு தலா ரூ.56 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டி.ஆர்.ஐ. அதிகாரிகள், பெங்களூரு மத்திய சிறைக்குச் சென்று, ஒவ்வொருவருக்கும் அபராத நோட்டீஸை வழங்கியுள்ளனர்.