Skip to main content

 'ஆர்.ஆர்.ஆர்' ஷூட்டிங் நிறைவு! கேக் வெட்டிய ராஜமௌலி! 

Published on 19/08/2021 | Edited on 19/08/2021
ntdhjdtjthd

 

பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிவரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்படும் 'இரத்தம் ரணம் ரௌத்திரம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில், சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில், பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது, இந்த வருடம் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

 

இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் இரண்டு பாடல் காட்சிகளைத் தவிர்த்து இதரக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாகப் படக்குழு சமீபத்தில் அறிவித்தது. மேலும், ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும் இரண்டு மொழிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும், விரைவில் இதர மொழிகளுக்கான டப்பிங்கையும் பேசி முடித்துவிடுவார்கள் எனவும் படக்குழு அறிவித்திருந்த நிலையில், எஞ்சியுள்ள பாடல்களில் ஒரு பாடலை வெளிநாட்டில் படமாக்கப் படக்குழு முடிவுசெய்துள்ளதாக சமீபத்தில் புதிய தகவல் வெளியானது. 

 

இதனையடுத்து இந்தப் படப்பிடிப்புக்காகப் படக்குழுவினர் உக்ரைனில் முகாமிட்டுள்ள நிலையில் அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ராஜமௌலி கேக் வெட்டினார். இதைத்தொடர்ந்து விரைவில் இதன் கடைசிகட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்கள் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. அதோடு இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது. இதற்கிடையே அனிருத் குரலில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நட்பு' பாடல் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்