சவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று, பிப்ரவரி 1ம் தேதி, சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் 'எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகாடமி' திறப்பு விழா நடந்தது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கிய இந்நிகழ்வில், பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர். மேலும் தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம்.எல்.ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது விழாவில் நடிகை ரோஜா எம்.எல்.ஏ பேசும்போது...
"நான் சினிமா துறைக்கு வந்தபோது என்னைப் பலரும் கிண்டல் செய்தனர். நான் கொஞ்சம் கலர் கம்மி, அதனால் வெற்றிபெற மாட்டேன் என்றனர். ஆனால் என்னை சினிமாவில் அழகாக காட்டி, கலரும் கூட்டி காட்டி ரசிகர்கள் மனதில் பதிய வைத்தவர்கள் மேக்அப் மேன்கள்தான். இந்த விழாவுக்கு என்னை அழைத்ததில் மகிழ்ச்சி. வீட்டில் விசேஷம் நடந்தால் அந்த வீட்டின் மகளைத்தான் விளக்கு ஏற்ற வைப்பார்கள். அதே போல் இந்த விழாவில் என்னை விளக்கு ஏற்ற வைத்திருக்கிறார்கள். அரசியலில் நான் இன்றைக்கு பல போராட்டங்களைச் சந்தித்து வெற்றி பெற்றதற்கு எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மாதான்" என்றார்.