கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 25 லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்திலிருந்து இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால்தான் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த மோசமான நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ரோஹித் ஷெட்டி மும்பையில் அவருக்குச் சொந்தமான 8 ஹோட்டல்களை கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுத்து வரும் நிவாரணப் பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள தந்திருக்கிறார். இந்தத் தகவலை மும்பை காவல் துறை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், “மும்பை நகரம் முழுவதுமுள்ள தனக்குச் சொந்தமான 8 ஹோட்டல்களை நமது கரோனா போராளிகள் ஓய்வெடுக்கவும், குளிக்கவும், உடை மாற்றவும், இரண்டு வேளை உணவு ஏற்பாட்டுடன் ரோஹித் ஷெட்டி வழங்கியுள்ளார். இந்த அன்பான உதவிக்கும் மும்பையைப் பாதுகாப்பதில் எங்களுக்கு உதவுவதற்கு அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளது.