தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி, ‘அண்ணாத்த’, ‘டான்’, ‘விடுதலை’ உள்ளிட்ட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இவரது சகோதரரின் மகள் திருமண விழா, கடந்த 9ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இந்த திருமண விழாவை நடிகர் சூரி முன்னின்று நடத்தினார்.
இந்த விழாவில் மண்டபத்தின் ஓர் அறையில் இருந்த 10 சவரன் நகைகள் மாயமானதையடுத்து, கீரைத்துறை போலீசில் சூரி குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த கீரைத்துறை போலீசார், சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்திவந்தனர். போலீசாரின் இந்த விசாரணையில், பரமக்குடியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் 10 சவரன் நகைகளைத் திருடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தினேஷை கைதுசெய்த கீரைத்துறை போலீசார், அவரிடமிருந்து 10 சவரன் நகைகளையும் மீட்டனர்.