Skip to main content

''நாங்களே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற நிலையில் இருந்தாலும் கூட...'' - ஆர்.கே.செல்வமணி உதவி!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகும் நிலையில் கரோனா பரவலைத் தடுக்க முன்னதாக கோலிவுட் திரைப்பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் எதுவும் நடைபெறாத நிலையில் சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சினிமா தொழிலாளர்கள் சங்கமான ஃபெப்ஸியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பிரபலங்களிடம் நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்த பலரும் லட்ச கணக்கில் நிதியுதவி அளித்தனர்.மேலும் பல நடிகர்கள் தொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொடுத்தனர். இந்நிலையில் நிதியுதவி அளித்த திரை பிரபலங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அதில்...

 

bdgv

 

"கரோனா பாதிப்பால் நிதியுதவி கோரி திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கு இதுவரை 2 கோடி 45 லட்ச ரூபாய் நிதியாக திரையுலகினர் உதவி செய்துள்ளனர். அதேபோல் 2400 அரிசி மூட்டைகள் உதவியாகக் கிடைத்துள்ளன. 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு சங்கத்துக்கும் 100 பேரை வரவழைத்து சமூக இடைவெளி விட்டு உதவிகள் செய்து வருகிறோம். இதுவரைக்கும் 15 ஆயிரம் பேருக்கு உதவி செய்திருக்கிறோம்.இன்னும் 10 ஆயிரம் பேருக்குத் தேவைப்படுகிறது. ஒரு நபருக்கு 25 கிலோ அரிசியும், 500 ரூபாய் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கும் அளித்து வருகிறோம். 25 ஆயிரம் பேருக்கும் கொடுப்பதற்கு 3.75 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. 2 கோடி 45 லட்ச ரூபாயை வைத்து முதலில் கொடுத்து வருகிறோம். இதர நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உதவி செய்வதை வைத்து இதை முடிக்கவுள்ளோம்.அனைத்து உறுப்பினர்களுக்குமே இந்த உதவியைச் செய்வதாகக் கூறியுள்ளோம்.அதை நிச்சயமாக இன்னும் 2, 3 நாட்களுக்குள் முடித்துவிடுவோம்.

 

ரஜினி, அஜித், சிவகுமார் குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி எனத் தொடங்கி உதவி செய்த அனைவருக்கும் நன்றி.நிதியுதவி அளித்தவர்களில் திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரை வெளியே சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் 25 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.பசிப் பிணியைப் போக்கிய அனைவருக்கும் நன்றி.இது சாதாரண விஷயமல்ல.இந்தப் புண்ணியம் அனைத்துமே உங்களுக்கும்,உங்கள் குடும்பத்துக்கும்தான்.உயர்ந்த நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்குமே வேராக இருப்பது திரைப்படத் தொழிலாளர்கள்தான்.இந்த வேருக்கு இப்போது தண்ணீர் ஊற்ற வேண்டும். இன்னும் 9 ஆயிரம் பேருக்கு உதவிகள் தேவை.அனைத்துத் திரையுலகினருமே உதவ வேண்டும். எவ்வளவு பணம் என்பது முக்கியமில்லை, மனம் தான் முக்கியம். உதவிகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
 

http://onelink.to/nknapp

 

பெப்சிக்கு கொடுப்பதைத் தாய் வீட்டுக்குக் கொடுக்கும் சீதனமாகத்தான் வைத்துக் கொள்ள வேண்டும்.அரசுக்கும் அனைவரும் நன்கொடை கொடுக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம்.கார்கில் போர், குஜராத் பூகம்பம் ஆகியவற்றின்போது அந்தப் பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. இப்போது ஒட்டுமொத்த இந்தியாவே பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நேரத்தில் ஒவ்வொரு கலைஞனும் உதவி செய்ய வேண்டியது கடமை. நாங்களே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற நிலைமையில் இருந்தாலும் கூட, உறுப்பினர்கள் சந்தா தொகையிலிருந்து 10 லட்ச ரூபாய் நன்கொடையாகக் கொடுக்கவுள்ளோம். அதேபோல் பெப்சி தொழிலாளர்கள் அனைவரும் 1 ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்றார்கள். ஆகவே, மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை தமிழக அரசின் நிவாரண நிதிக்குக் கொடுக்கவுள்ளோம். அதேபோல் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது தமிழக அரசு.அதில் திரைப்படத் தொழிலாளர்கள் விடுபட்டுப் போயுள்ளனர்.அதில் எங்களையும் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.இது தொடர்பாகக் கடிதமும் கொடுத்துள்ளோம். அதேபோல் நாங்கள் யாரையும் நேரடியாக அணுகவில்லை.மீடியா வாயிலாக மட்டுமே உதவிகள் கேட்டு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டோம்.அதேபோல் தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் கடிதம் அனுப்பினோம்'' 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த விஷயத்தில் திராவிட கழகங்களைப் பின்தொடர வேண்டும்” - ஆர்.கே. செல்வமணி

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
rk selvamani about censor issue

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. இப்படத்தின் கதை சில வருடங்களுக்கு முன் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் படத்தின் தலைப்பிற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு படத்தின் காட்சிகளைத் தான் வெளியிடக் கூடாது என்றனர். கேசட்டுகளை வெளியிடலாம் என்று கூறி படத்தின் பாடலை வெளியிட்டார். 

இந்நிகழ்ச்சியில் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “இந்த சென்சார் அராஜகத்திற்கு முதலில் பலியான இயக்குநர் நான் தான். அன்று சற்று காம்ப்ரமைஸ் ஆகி சென்றதால் என் படம் வெளியானது. ஒரு வேளை அன்று விடாப்பிடியாக போராடி இருந்தால் இன்று இவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்களோ என்னவோ? நக்கீரன் சார் சொன்னதைப் போல, நாங்கள் கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டோம். அடுத்து ஒருவர் வந்து எதிர்வினை ஆற்றும்போது தாக்குதல் துவங்கி விடுகிறது. 

இரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். எதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல், அதே நேரம் வளைந்து போகவும் கூடாது. புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் படங்களில் இது கற்பனை என்கின்ற ஒரு கார்டை போட்டு, உண்மை சம்பவங்களில் இருந்து சில விஷயங்களை மாற்றி வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்றும் ஆட்டோ சங்கர் என்பதை ஆட்டோ தர்மா என்றும் லேசாக மாற்றி திரைப்படமாக எடுத்தேன். மக்கள் சரியாக நான் எதைப் பற்றி கூறுகிறேன் என்பதை புரிந்துகொண்டு ரசித்தார்கள். அந்தப் படங்கள் தந்த வெற்றியின் உற்சாகத்தில் நான் அடுத்து குற்றப்பத்திரிக்கை என்கின்ற படத்தை எடுத்தேன். அப்பொழுது நான் புரிந்து கொண்ட உண்மை, உண்மையை பேசக்கூடாது என்பதே. நேசமுரளி சொன்னது போல் விளம்பரங்கள் மற்றும் படங்கள் மூலம் பொய் பேசலாம், வன்மம் வளர்க்கலாம். ஆபாசம் பேசலாம். ஆனால் உண்மை பேசக்கூடாது என்பதை அறிந்து கொண்டேன். 

இந்த விஷயத்தில் கலைஞர்கள் திராவிட கழகங்களைத் தான் பின்தொடர வேண்டும் என்று சொல்வேன். கெடுபிடிகள் இருந்தாலும் தங்கள் படங்களின் மூலம் கருத்துகளை பரப்பி ஆட்சிக் கட்டிலுக்கு வந்த திராவிட கழகங்களைத் தான் கலைஞர்கள் பின்பற்ற வேண்டும். அதே நேரம் அதிகாரத்திலிருப்பவர்கள் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. கல்லில் தொடர்ச்சியாக மோதிக் கொண்டே இருந்தால் தலை உடையும் என்று தெரிந்தும் தொடர்ச்சியாக முட்டிக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் இல்லை. உளியினால் அந்தக் கல்லை உடைக்க முயல்வது தான் புத்திசாலித்தனம். ஒரு காலத்தில் மக்களைக் காக்கவே போலீஸும் அதிகாரமும் இருந்தது. ஆனால் தற்போது போலீஸும் அதிகாரமும், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவே போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். 

துணிச்சலான மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களையே இப்படி மிரட்டுகிறார்கள் என்றால், நேசமுரளி போன்றோரை சுண்டைக்காய் நசுக்குவது போல் நசுக்கிவிடுவார்கள். எனவே இயக்குநர் நேசமுரளி புத்திசாலித்தனமாக இந்தப் பிரச்சினையை அணுகி, தன் படத்தை வெளியிட்டு மேலும் பல படங்கள் எடுத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார். 

Next Story

“நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்த் பெயரை விவாதிப்பதே அவமானம்” - ஆர்.கே.செல்வமணி

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
rk selvamani speech at vijayakanth memorial meet

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்த்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் என நடிகர் சங்க நிர்வாகிகளுடன் நடிகர்கள் கமல், விக்ரம், சரத்குமார், ராதா ரவி, சிவகுமார், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகில் பல பிரிவுகளில் பணியாற்றும் பலரும் கேப்டன் விஜயகாந்த்தின் மகன்களான விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் அவரது மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வில் இயக்குநரும், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “சாதாரண திரைப்பட கல்லூரி மாணவனாக இருந்த என்னை உலகம் முழுக்க அறியச் செய்தவர் கேப்டன் விஜயகாந்த். அவர் நடிகர் சங்கத்திற்கு தலைவரான பிறகு சமுதாயத்தில் நடிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்படுத்தி தந்தவர். ஒரு அமைப்பு என்பது சமூகத்திற்கு பயன்படாவிட்டால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் தான் விஜயகாந்த் தலைவராக மாறிய பிறகு அவர் தலைமையில் நடைபெற்ற நெய்வேலி போராட்டத்தை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அப்போதுதான் நடிகர் சங்கம் என்றால் என்ன என்பது இந்தியாவுக்கே தெரிந்தது. புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க வளாகத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் கூட ஒரு விண்ணப்பத்தை வைக்க விரும்புகிறேன். 

ஏனென்றால் நடிகர் சங்கம் இன்று எவ்வளவு மரியாதையாக தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால், அது புகழின் உச்சத்தை தொட்டது என்றால் அது கேப்டனால் மட்டும்தான். அவருடைய பெயரை வைக்கலாமா வேண்டாமா என்று விவாதம் செய்வதையே கூட, அவருக்கு செய்யும் அவமானமாகத்தான் நான் கருதுகிறேன். எந்த விவாதமும் இல்லாமல் அவர் பெயரை வைக்க வேண்டும். முதல்வர் இரண்டு முறை வந்து கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதால் விஜயகாந்த்திற்கு பெருமை இல்லை. தமிழக முதல்வருக்கு தான் பெருமை. பிரதமர் கூட தான் பேசும் மேடைகளில் கேப்டன் விஜயகாந்த் பெயரை சொல்லும் அளவிற்கு ஒரு தாக்கத்தை அவரது மரணம் ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல நடிகர் சங்க வளாகத்திற்கு அவரது பெயரை வைப்பதால் விஜயகாந்த்திற்கு புதிதாக புகழ் எதுவும் கிடைக்கப்போவதில்லை. நடிகர் சங்க வளாகத்திற்கு தான் பெயர் கிடைக்கப் போகிறது. நடிகர் சங்க கடனை எப்படி அடைத்தீர்கள் என அவரிடம் நான் கேட்டபோது, அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா எல்லாம் சரத்குமாரிடம் கேட்டுக்கொள். அவர் தான் எல்லாத்தையும் செட்டில் செய்தார் என்று தனக்கு கிடைத்த புகழை கூட விரும்பாதவர் விஜயகாந்த். மகாத்மா காந்தியைக் கூட பொது இடத்தில் தான் புதைத்தார்கள். ஆனால் தன்னுடைய சொந்த இடத்திலேயே அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும் அளவிற்கு பொதுச்சொத்தை எடுத்துக் கொள்ளாத ஒரு தலைவர் விஜயகாந்த். 

அவரைப் பற்றி ஒரு புத்தகம் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அவருடைய பிறந்த நாளில் அவர் வாழும் காலத்திலேயே அதை வெளியிட வேண்டும் என நினைத்திருந்தேன். துரதிஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது. அவர் நினைவுடன் இருந்தபோது, கடைசியாக நான், இயக்குநர் விக்ரமன், ஆர்வி உதயகுமார், பேரரசு உள்ளிட்ட ஐந்து பேர் அவரை சந்தித்தோம். அப்போது புலன் விசாரணையில் எப்படி என் கைகளை இறுக்கி பிடித்தாரோ, அதேபோன்று பிடித்துக்கொண்டார். புலன் விசாரணை படத்தின் படப்பிடிப்பை ஒரு பொருட்காட்சியில் நடத்திக் கொண்டிருந்தபோது அதிகப்படியான கூட்டம் கூடி தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, போலீசார் என்னை தவறுதலாக அடித்து விடக்கூடாது என்று என்னுடைய கரங்களை இறுக பற்றிக்கொண்டு அடை காத்தவர் விஜயகாந்த். அதேபோல அவரை கடைசியாக சந்தித்தபோது, ஆர்வி உதயகுமார் அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே என்று பாடியபோது எங்கள் எல்லோர் கண்களிலும் கண்ணீர் வழிய, கேப்டனின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. அதையும் தாண்டி எங்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு அழ வேண்டாம் என எங்கள் கண்ணீரை துடைக்க முற்பட்டார்.

1988 டிசம்பர் 28ஆம் தேதி தான் புலன் விசாரணை படம் பூஜை போட்டு துவங்கப்பட்டது. அவர் மறைந்ததும் அதே போன்று டிசம்பர் 28ஆம் தேதி தான். ஏதோ ஒரு வகையில் எனக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அவரை கேப்டன் விஜயகாந்த் என எல்லோரும் சொல்லும்போது அதில் பத்து சதவீதம் பங்கு எனக்கும் இருக்கிறது என்று பெருமிதம் கொள்கிறேன். கேப்டனின் மறைவுக்கு யாரும் வரவில்லை என்றால் மக்கள் அவர்களை குற்றம் சாட்டுகின்ற அளவுக்கு மக்களின் மனநிலை இருந்தது. மக்களுக்கு பயந்தாவது நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்கிற கட்டாயத்தை பொதுமக்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அதுதான் கேப்டன் விஜயகாந்தின் பலம். வாழும் வரைக்கும் அவரது பலம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் மறைந்த இன்றும் அவரது நினைவிடத்தில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால் இதை விட ஒரு நன்றிக்கடனை தமிழக மக்கள் வேறு யாருக்கும் செலுத்தி இருக்க மாட்டார்கள்” என்றார்.