Skip to main content

சாக்‌ஷி மாலிக் முடிவு குறித்து ரித்திகா சிங்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
ritika sing about sakshi malik statement

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக், முக்கிய பங்கு வகித்தவர். இதையடுத்து பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கடந்த 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் தலைவராக வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்தார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சாக்‌ஷி மாலிக், இதயத்திலிருந்து தான் போராடியதாகவும், ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரரும் நடிகையுமான ரித்திகா சிங் சாக்‌ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டிலிருந்து விலகுவதாக தெரிவித்தது தொடர்பாக பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “சாக்‌ஷி மாலிக்கைப் போன்ற ஒரு அடையாளமிக்க நபர், இப்படி முடிவெடுத்ததை பார்க்கும் பொழுது மனம் உடைந்தது. இந்தியாவில் பலரை பெருமைப்படுத்திய ஒரு ஒலிம்பிக் வீரர், தனது நம்பிக்கைகளையும் கனவுகளையும் கைவிட்டு, பல வருட கடின உழைப்பையும் கைவிட்டு ‘நான் விலகுகிறேன்’ என சொல்வது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முதலில் போராட்டத்தின் போது அவர் பட்ட அவமரியாதை. அதை தொடர்ந்து இது” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்