Advertisment

அல்லு அர்ஜூன் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் சண்டை போட்டாரா? - ரேவந்த் ரெட்டி

revanth reddy about allu arjun arrest

புஷ்பா 2 - தி ரூல்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது, அங்கு எந்த முன் அறிவிப்புமின்றி அல்லு அர்ஜூன் சென்றார். திடீரென அவரை பார்த்ததால் ரசிகர்கள் அனைவரும் அவரை நோக்கி ஓடினார். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (வயது 39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இந்த சம்பவ எதிரொலியாக தெலங்கானா அரசு வரும் காலங்களில் சிறப்புக் காட்சிக்கு தடை விதித்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இன்றி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அல்லு அர்ஜூன் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாக உத்தரவாதம் கொடுத்தார். மேலும் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர், மேலாளர், பால்கனி மேற்பார்வையாளர் என மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே அல்லு அர்ஜூன், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தான் அல்லு அர்ஜூன் காவல் துறையினரால் நேற்று (13.12.2024) கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல் நிலையத்தின் விசாரணைக்குப் பிறகு ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து நேற்று அவர் சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக தெலுங்கு நடிகர் நானி, நடிகை ராஷ்மிகா மற்றும் இந்தி நடிகர் வருண் தவான் உள்ளிட்ட சிலர் அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மேலும் பா.ஜ.க. மத்திய இணை அமைச்சர் பந்தி சஞ்சய் குமார் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகி, முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராம ராவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருக்க அல்லு அர்ஜூன் தரப்பில் ஜாமீன் கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. 50 ஆயிரம் ரூபாய்க்கான பிணையப் பத்திரத்தின் அடிப்படையில் அல்லு அர்ஜுனுக்குத் தெலுங்கானா உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன் இன்று (14.12.2024) காலை விடுவிக்கப்பட்டார். அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இதனிடையே அல்லு அர்ஜூன் கைதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “சினிமா ஸ்ட்ராக இருந்தாலும் சரி அரசியல் ஸ்ட்ராக இருந்தாலும் சரி எங்கள் அரசாங்கம் அதை பற்றி கவலைப்படுவதில்லை. நாங்கள் யார் குற்றம் செய்தார்கள் என்று மட்டுமே கவலைப்படுவோம். சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதற்கு யார் பொறுப்பு. போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சத்தம் போடாமல் அமைதியாக தியேட்டருக்கு வந்து படம் பார்த்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் இந்த நாட்டில் உள்ள சாதாரண குடிமகன் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் சமம். அல்லு அர்ஜூன் ஒரு நடிகர். அவர் இந்த நாட்டிற்காக இந்தியா பாகிஸ்தான் எல்லையில்போய் நின்று சண்டை போட்டு வெற்றி பெற்றாரா ? படம் நடிக்கிறார் , பணம் சம்பாதிக்கிறார்” என்றுள்ளார்.

revanth reddy allu arjun
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe