Resul Pookutty on Kanguva's loud music

Advertisment

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த கங்குவா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று(14.11.2024) பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பதானி மற்றும் பாபி தியோல் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, கே.எஸ் ரவிகுமார், கருணாஸ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக படம் முழுக்க அனைவரும் கத்தி கத்தி பேசுவதாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இந்த விமர்சனம் தொடர்பாக ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒரு ரீ ரெக்கார்டிங் மிக்ஸராக இருக்கும் நண்பர் ஒருவர் இந்த கிளிப்பை பகிர்ந்திருந்தார். இது போன்ற நமது பிரபலமான படங்களில் ஒலி பற்றிய விமர்சனத்தைப் பார்ப்பது மனவருத்தமாக இருக்கிறது. எங்களுடைய கலையும், கலைத்திறனும் இரைச்சல் யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. யாரை குறை சொல்வது? சவுண்ட் இன்ஜினியரயா? அல்லது கடைசி நேரத்தில் வரும் எண்ணிலடங்கா திருத்தங்களா? இதை சத்தமாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும். பார்வையாளர்கள் தலை வலியுடன் வெளியேறினால், எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment