தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ, ஜவான் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறார். இதனிடையே ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்தியில் வருண் தவானின் 18வது படமான ‘பேபி ஜான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அட்லீ நிறுவனத்துடன் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் தயாரிக்கிறார்கள்.
காளீஸ் இயக்கும் ‘பேபி ஜான்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடிக்கின்றனர். மேலும் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படம் ஆக்சன் ஜானரில் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக்காக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இயக்குநர் அட்லீ தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது. பேபி ஜானுக்காக உங்களை பிரியப்படுத்துங்கள்’ எனக் குறிப்பிட்டு இந்த படம் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் வெளிவர இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.