இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகஅறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் கதிர்-ஆனந்தி இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.இப்படத்தில், நரேன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.'AAAR' நிறுவனம்சார்பில், லவன் பிரகாசன் மற்றும் குசன் பிரகாசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம்,டிராமா திரில்லர் வகை படமாக உருவாகிறது.இப்படத்தை, அறிமுக இயக்குனர் ஸாக் ஹாரிஸ் இயக்குகிறார்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் கூறுகையில், "தமிழ்த் திரையுலகில் இது எங்களின் முதல் திரைப்படம். தொடர்ந்து கனமான கதைகள் கொண்ட, ரசிகர்கள் விரும்பும் தரமான படங்களைத் தயாரிப்போம். குறிப்பாக, புத்தம் புது ஐடியாக்களுடன் போராடும் புதிய இளம் திறமையாளர்களைத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம்.நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஆகியோர் எங்கள் படத்தில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி.
மேலும், அனைவராலும் கொண்டாடப்பட்ட “பரியேறும் பெருமாள்” படத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி இருவருரின் கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக இருந்தது. நடிகர் கதிர் இப்படத்திற்குப் பிறகு மிகப்பெரும் உயரத்திற்குச் செல்வார். விரைவில் இப்படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். 2021 வருடத் தொடக்கத்தில் படத்தைத் துவக்கி, 2021 கோடைக் காலத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இப்படம் சென்னை மற்றும் கேரளப் பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது" இவ்வாறு கூறினார்.