- திரைப்படத் தயாரிப்பாளர் கஸாலி
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரைப்படத் துறையில் வருடத்திற்கு ஏறக்குறைய 500 படங்கள் தயாரிப்பைத் துவங்குகின்றன. ஏறத்தாழ 300 படங்கள் வரை முடிந்து சென்சார் வரைக்கும் வருவதற்குத் தயாராகின்றன. 250 வரை சென்சார் ஆகின்றன. கடைசியில் 200 படங்கள் வரை ரிலீசாகின்றன. அவற்றில் 150 படங்கள் தோல்வியடைகின்றன. அதாவது பல வருடங்களாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் 80% வரை பெரும்பாலும் தோல்வியடைகிறார்கள்.
வெற்றியடைந்த படங்களின் தயாரிப்பாளர்களில் பலருக்கு..? லாபமில்லாமலும், கொஞ்சம் நஷ்டமும் ஏற்படுகின்றன. ஆபரேசன் சக்சஸ் கதைதான்! எந்தவொரு தொழிலும்; எந்தவொரு வியாபாரமும் காரண காரியங்களை அலசாமல் தொடர்ந்து செய்தால் அதில் வெற்றி பெறுவது கடினம். தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் தோல்வியைச் சந்திப்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.
தங்களை; தங்கள் கம்பெனிகளை சரிவர விளம்பரம் செய்யாமல் ஒதுங்கியிருப்பது. சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த 'டாடா' திரைப்படம் படம் வெற்றி. டாடா என்றதும் நினைவுக்கு வருவது கவின் மட்டுமே. அடுத்து ஓரளவுக்கு அறியப்படுவது அதன் இயக்குநர். மூன்றாவதாக போனால் போகிறதென்று தெரிவது அதன் தயாரிப்பாளர் அம்பேத்குமார்.
சரி, இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றதனால் கவினுக்குப் பின்னால் 10 பேர் கதை சொல்லக் காத்திருக்கிறார்கள். அதன் இயக்குநர் கணேஷ் கே பாபுவுக்கு சில நடிகர்கள், சில தயாரிப்பாளர்கள் போன் செய்ததாகக் கேள்வி. ஆனால், தயாரிப்பாளர் பின்னால் எத்தனை நடிகர்கள் காத்திருக்கிறார்கள்? அடுத்து, அதே நிலைமைதான் விடுதலை 1-க்கும்! வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி... அவ்வளவுதான். எல்ரெட் குமார்..?
பணம் போடும் தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் திரைத்துறை இல்லை. பெரிய நடிகர்களை வைத்துப் படம் தயாரிப்பவர்கள் பெரும்பாலும் வட்டிக்கு வாங்குகிறார்கள். சிறிய & மீடியம் பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் புதியவர்கள். அவர்களுக்கு ஆலோசனை வழங்க எந்தச் சங்கமும் இல்லை. அப்படியே சில நேரம் சங்கம் தயாரானால் புதிதாய் வரும் தயாரிப்பாளர்கள் அதை பொருட்படுத்துவதும் இல்லை.
ஓடிடி தளங்களில் தங்களது படங்களை விற்று விடலாம் என நம்பியும் சிலர் ஏமாறுகின்றனர். ஒரு படத்தின் பட்ஜெட் குறித்து சரியான திட்டமிடுதல் இல்லாதது காரணம். புதிய தயாரிப்பாளர்கள் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களிடம் யோசனைகளை கேட்பதற்கு கூச்சப்படுகின்றனர்.
பல ஆடியோ லான்ச் மேடைகளில் இயக்குநர்கள், ‘தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடக்கும் பகுதிகளுக்கு வராமல் கேட்கும் பணத்தை தருவார்கள்’ என்று பேசுவார்கள். நம் பார்வையைத் தாண்டி நிகழும் எந்தவொரு தொழிலும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வாய்ப்பில்லை. இந்த உண்மையை அனைத்துத் தயாரிப்பாளர்களும் உணர்வது அவசியம். சங்கங்கள் நிச்சயம் வியாபாரம் செய்து கொடுக்காது. கொடுக்கவும் கூடாது. ஆலோசனைகள் கூறலாம். பிரச்சனைகளைக் களையலாம். மற்றபடி சொந்தக்காலில் தான் நாம் நடக்க வேண்டும்.