Skip to main content

“எனக்கு நானே போட்டி” - நடிகர் கிருஷ்ணா பேட்டி

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Rayar Parambarai - Actor Krishna  Interview

 

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ‘ராயர் பரம்பரை’ படத்தின் குழுவினரைச் சந்தித்தோம். இயக்குநர் ராம்நாத், நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகை சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விசயங்கள் மற்றும் நடித்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

 

நடிகர் கிருஷ்ணா பேசியதாவது, “கதைக்கு முழுமையாகப் பொருந்தும் ஒரு டைட்டில் ராயர் பரம்பரை. படம் பார்த்த பிறகு அனைவருக்கும் இது புரியும். ஆனால் இது ஜாதி சம்பந்தப்பட்ட படமா என்று பலர் கேட்கின்றனர். என்னுடைய காமெடி படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கதையும் கேரக்டரும் எனக்கு கனெக்ட் ஆனால் நிச்சயம் நான் நடிப்பேன். இருப்பதிலேயே கடினமான ஜானர் என்றால் அது காமெடி தான். புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்கும்போது பிரஷர் அந்த இயக்குநர்களுக்குத் தான் அதிகம் இருக்கும். 

 

ஆடியன்ஸ் என்னிடம் குறிப்பிட்ட எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதுதான் என்னுடைய பலம். கழுகு, யாமிருக்க பயமேன் போன்ற படங்கள் மக்களுக்கும் எனக்கும் புதிதாக இருந்தது. கதைக்களம் புதிதாகவும் இருக்க வேண்டும், மக்கள் ரசிக்கும்படியும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய சமகால நடிகர்களுடன் நல்ல நட்பு இருப்பதால் போட்டி என்பதற்கே இடமில்லை. எனக்கு நானே தான் போட்டி. 

 

மைனா, ஆரண்ய காண்டம், மாரி போன்ற படங்களில் முதலில் நான் நடிக்க வேண்டியதாக இருந்தது. யாக்கை படத்திற்காக நான் உயிரைக் கொடுத்து நடித்தேன். ஆனால் அதற்கான வெற்றி கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது. மனோபாலா சாரும் மனோகர் சாரும் இந்தப் படத்தில் நடித்தார்கள். ஆனால் படம் வெளியாகும்போது அவர்கள் உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்களோடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். காமெடியை எதிர்பார்த்து வரும் மக்களை நிச்சயம் இந்தப் படம் திருப்திப்படுத்தும். முழுக்க முழுக்க காமெடியான படம் இது. நிறைய காதல் தோல்விகளைப் பார்த்துவிட்டதால் காதல் தோல்விப் பாடல்கள் எனக்கு நன்றாக செட்டாகின்றன என்று நினைக்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்